Friday 23 October 2015

Eight Below (2006) : அண்டார்ட்டிக்கா..

அண்டார்க்டிக்கா......வலுவான தோற்றத்தில் ஆண்மையையும் அழகிய உருவமைப்பில் பெண்மையையும் இரண்டர கலந்திருக்கும் உலகின் விசித்திரமான பூமி.குமரிக்கண்டம், அட்லாண்டிஸ் போன்ற வியக்கத்தக்க பேரதிசயங்களை பற்றிய தேடலில் நான் கண்டுக்கொண்ட இன்னொரு உலகம்.எங்கும் பனிப்பாறைகள், ஆளைக் கொல்லும் குளிர் என்று தனக்குள் எந்த அரசியலையும் பெரும்பாலும் சிக்கவைக்காத ஆச்சரியமிக்க கண்டம்.கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அங்கும் வாழ தன்னை பழக்கப்படுத்தி கொண்டான் மனிதன்.சின்ன வயதில் எனக்குள் ஏற்பட்ட தாகம்தான் அண்டார்டிக்கா போன்றவை.நாளிதழ், இணையம் என்று எங்கு இந்த பெயரை கேட்டாலும் ஓரளவாவது கண்களை அசைத்து விட்டுதான் நகர்வேன்.இணையத்தில் புகைப்படங்களை தேடி பார்த்து மகிழ்வேன்.அதுவே ஒரு திரைப்படம் அண்டார்டிக்காவை மையப்படுத்தியதென்றால்..

ஓர் உண்மை கதையின் பிரதிபலிப்பாய் ஏய்ட் பிளோ திரைப்படம் :

ஜெர்ரி ஷெப்பர்ட் அண்டார்க்டிக்கா ஆராய்ச்சி கழகத்தில் பயண வழிக்காட்டியாக பணிப்புரிந்து வருபவர்..படுக்குளிரும் பனியும் ஒரு சேர உறவாடும் அப்பகுதியில், அவருக்கு துணையாக எட்டு சவாரி செய்யும் நாய்கள்.ஒரு நாள், புதன் கிரகத்திலிருந்த ஒரு அரிய வகை கல், மெல்போர்ன் என்ற பகுதியில் இருப்பதாக கூறிக்கொண்டு வருகிறார் பேராசிரியர் டேவிஸ் மெக்லேரன்.ஷெப்பர்ட், அங்கு பனிப்பாறைகளின் பிளவுகள் அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று எச்சரிக்கிறார்.அதை மீறியும், தனது பாஸ் உத்தரவின் பேரில் ஷெப்பர்ட், அந்த இடத்துக்கு அழைத்து செல்ல சம்மதம் தெரிவிகிகிறான்.மறு நாள் காலை, இருவரும் எட்டு நாய்களின் சவாரி பயணத்தோடு புறப்படுகிறார்கள்.
அது ஒரு நீண்ட தூர பயணம்...எங்கும் பனிப்பாறைகளும் பிளவுகளும் உயிரை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும் என அத்தனையும் பயங்கரமான தருணங்கள்.கண்ணில் கண்ட அழகெல்லாம் உண்மைகள் இல்லை..ஆபத்துகள் அதிகம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அண்டார்ட்டிக்கா போலும்,

இவர்களது பயணத்துக்கு இடையே, கழகத்திலிருந்து ஷெப்பர்ட்டுக்கு அழைப்பு வருகிறது.அதாவது, பலத்த புயல் தாக்கவிருப்பதாகவும் ஆதலால் விரைவில் திரும்பிவிடவும் என்று செய்தி வருகிறது.அன்று அங்கேயே தங்கிவிட்டு காலையில் முதல் வேலையாக புறப்பட வேண்டும் என பேராசிரியரிடம் கூறுகிறான்.ஆனால், "வந்த வேலை முடியவில்லை. மெல்போர்னுக்கு வந்திருப்பினும் கல்லை இன்னும் தேட தொடங்கக் கூட இல்லை.இவ்வளவு தூரம் உயிரை அடகு வைத்து இங்கு வந்துவிட்டு கல்லை தேடாது சென்றால் எல்லாம் விரயம் ஆகிவிடும்" என்று பேராசிரியர் ஷெப்பர்ட்டிடம் சொல்கிறார்.முதலில் மறுக்கும் அவன் பிறகு ஒத்துழைக்கிறான்.காலை விடிந்தது.தேடலில் இருவரும் இறங்குகிறார்கள்..இறுதியில் அந்த அரிய கல் கிடைக்கவே அங்கிருந்து கிளம்புகிறார்கள்.இதற்கிடையே, புயல் தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டு இந்த இடத்தை தாக்கவிருப்பதாக செய்தியும் நிலையத்துக்கு கிடைக்கிறது.

எட்டு நாய்களும் வேகத்தோடு இவ்விருவரையும் இழுத்துக் கொண்டு போகிறது.. திடீரென்று ஒரு நாயுக்குக்கு ரத்தம் கசியவே, இறங்கி பார்க்க வருகிறார் ஷெப்பர்ட்.அவரோடு இறங்கிய பேராசிரியர் தப்பித்தவறி பனி பிளவு ஏற்பட்டு கீழே விழவே கால் முறிகிறது.பற்றாக்குறைக்கு பனிகட்டியும் வேறு, உடைந்து தண்ணீரில் தத்தளிக்கிறார்.எப்படியோ நல்ல வேளையாக நாய்களின் உதவியோடு ஷெப்பர்ட் அவரை காப்பாற்றுகிறார்.இதற்கிடையே புயல் வேகம் அதிகரிக்கிறது.நாய்கள் காட்டுமிராண்டித்தனமாக அவ்விருவரையும் இழுத்து செல்கிறது.உடல் நலம் பாதிக்கப்படுகிறார் ஷெப்பர்ட். இறுதியாக, நாய்களின் அயராத உழைப்பால் நிலையத்துக்கு வந்து சேர்கிறார்கள்.

உடல் நலம் குன்றிய நிலையில், நாய்களை இங்கேயே விட்டுவிட்டு அனைவரும் கிளம்புகிறார்கள்.இவர்களை நல்லப்படி சேர்த்துவிட்டு, மீண்டும் வந்து நாய்களை அழைத்துவருவதாக வாக்குறுதியும் அளிக்கிறார்கள். ஆனால், நடந்தது என்ன ? கடும் பனிப்புயலால் தடை விதிக்கப்படுகிறது.யாரும் அந்த இடங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுகிறது.நாய்கள் அங்கே..நாயகன் இங்கே !! உயிர்களை காப்பாற்றி பல செயல்களுக்கு உறுத்துணையாக விளங்கிய அந்த நாய்களை காப்பாற்றினார்களா ? இல்லை உயிர்பலிகள் ஏதேனும் நிகழ்ந்ததா ?? போன்ற பல கேள்விகளுக்கு விடைக்கான திரைப்படம் பார்ப்பதே உத்தமம்.

பொதுவாக நாய்களை மையப்படுத்தி வரும் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லைகண்டவரை எனக்கு பிடித்த படங்களாக லாஸ்சி மற்றும் தெ எட்வெண்டுரஸ் ஓஃப் யெல்லோ டோக் ஆகியவற்றை சொல்லலாம்.பெரும்பாலான இந்த படங்களில் நாயகனை சிறுவனாக காட்டி, அவனுக்கு அந்த நாய் செய்யும் உதவிகளை சொல்லிருப்பார்கள்.அந்த வரிசையில் எயிட் பிளோ இதுவரை வந்த நாய் சம்பந்தபட்ட திரைப்படங்களில் சிறந்த படம்.மிருகங்கள் மீதான மனிதர்களின் சுய நலத்தை, நாய்களுக்கு உள்ள சிறந்த குணங்களை அவ்வளவு சிறப்பாக காட்டிருக்கிறார்கள்.

மெல்லிய மனதை உறையவைக்கும் சில்லென்ற ஒரு கதையை அதே போக்கில் விட்டு படமாக்கி இருப்பவர், ஐந்து முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவரும் ஸ்பீர்பெர்க் அவர்களின் ஆஸ்தான தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃப்ரேங்க் மார்ஷல்.அநேகமாக இவருக்கு சர்வைவல், எட்வெண்ட்ச்சர் போன்ற கதைகளில் அதிக ஆர்வங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் எலைவ் என்ற படத்தை பார்க்க வாய்ப்பு கிட்டியது.ஒரு விமான விபத்தால் அலாஸ்கா தீவில் சிக்கி உயிருக்கு போராடும் ரக்பி ஆட்டக்காரர்களை பற்றியது அது.உண்மை சம்பத்தின் தழுவலில் வந்த அப்படத்துக்கு ஈடுக்கொடுத்து மனிதனுக்கும் நாய்களுக்குமான ஓர் அற்புத உறவை திரையில் காண்பித்துள்ளார் இயக்குனர்.

கதைனாயகனாக, அலட்டிக்கொள்ளாமல் கதைக்கு தேவையான நடிப்பை இயல்பாக வழங்கிருக்கிறார் Paul Walker.தான் வளர்ந்த நாய்களை தொட்டு தழுவி அரவணைக்கும் போதும், நீண்ட தூரமிட்டு தனது உயிர்களை நினைத்து வருந்தும்போது பாசத்தையும், பேராசிரியருடனான பயணத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படும் வேளையில் படப்பட உணர்வையும் குரல், முகம் என அனைத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போல கதைக்கு தேவையான துணைக் கதாபாத்திரத்தில் ஹீரோயின் Moon Bloodgood  போன்றவர்கள் தத்தம் நடிப்பில் ஒளி வீசியுள்ளனர்.அப்புறம், சும்மா சொல்லக்கூடாது நாய்கள் அத்தனையும் செம்ம பியுட்டி..

அழகான ஃபோட்டோகிராப்பிக் - அதன் மீதான எனது அலாதியம் மிக பெரியது.டிரைலர் பார்த்துவிட்டு வெறும் கேமராக்காகவே எத்தனையோ படங்களை பார்த்த அனுபவம் உண்டு..அதுவும் எயிட் பிளோ படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தவுடனே எப்படியும் பார்த்துவிட வேண்டும் என தோன்றிற்று.அதற்கு முதன்மை காரணம், அண்டார்ட்டிக்கா என்ற பெயரும் குளிரும்தான்.அலாஸ்கா, கிரின்லாந்து போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வரும் குளிரை நாமும் உணர்ந்திடும்படி செய்துள்ள ஒளிப்பதிவாளர் Don Burgess அவர்களுக்கு நன்றிகள்.

இந்த சாதாரணமான கதையை வெறும் மனிதர்களை காட்டியே எடுத்திருந்தால் மொக்கையாகிருக்கும். அதை தவிர்க்க, தனது எஜமானரை பிரிந்து ஏங்கி தவித்து உயிருக்கு போராடும் நாய்களின் சூழலை வசனங்கள் இன்றி சிறப்பாக எடுத்துரைக்கும் காட்சிகளை எடுத்திருக்கும் திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை எவ்வளவு பாராட்டியும் தகும்.அதுவும் பிற்ப்பாதியில் நாய்களின் சாகசங்கள் அசத்தலாகவும் (பனிச்சிறுத்தை உடனான சண்டை உட்பட) இருக்கும்.கிளைமக்ஸ் என்னதான் ஓரளவு மகிழ்ச்சியானது என்றாலும் படம் முழுவதும் வரும் ஒரு விதமான மெல்லிய சோகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அச்சோகம் சுகமானதும் கூட...

நல்ல காலை, மாலை அல்லது இரவு நேர மழை வேளையில், வீட்டுக்குள் குளிர்ச்சாதனம் போட்டவாறு அல்லது ஜன்னல்களை திறந்துவிட்டவாறு பார்த்து ரசிப்பதற்கு ஏகுவான திரைப்படம் எயிட் பிளோ.அதுவும் நாய் வளர்ப்பவர்கள் மிஸ் செய்யக்கூடாத, சிறுவர்களோடு கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா.

@@====================================@@@======================@
Eight Below (2006) : எட்டு ஹீரோக்கள்..ஒரு நாயகன்
@@====================================@@@======================@

Tuesday 25 August 2015

Horror Of Dracula (1958)


சில மாதங்களுக்கு முன்பு பார்த்த திரைப்படமாகும்.தலைப்பிலேயே ஹாரர், டிராக்குலா என பயமுறுத்திய பழைய இங்கிலாந்து சினிமா.படம் அந்த இரண்டிலும் சுமார்தான் எனினும், ஓய்வு நேரத்தை செலவழிக்க கொஞ்சம் ஏகுவான படைப்பு.
பொதுவாக நான் டிராகுலா திரைப்படங்களை விரும்பி பார்ப்பது இல்லை.அதற்கான காரணத்தையும் நான் அறிந்ததில்லை.நான் இதுவரை பார்த்த டிராகுலா திரைப்படங்கள் இரண்டுதான்.ஒன்று 2004-ஆம் ஆண்டு வெளிவந்த VAN HELSING, இன்னும் ஒன்று இந்த ஹாரர் ஒஃப் டிராகுலா.சிறிய வயதில் சில டிராகுலா கதைகளையும் தகவல்களையும் விரும்பி படித்ததாக ஒரு ஞாபகம்.உலகில் அதுவும் இருளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் மிகவும் சுவாரஸ்யமான விடயங்களில் டிராகுலாவும் ஒன்றென அறிந்துக்கொண்ட காலம் அது.படித்த கட்டுரைகள், தகவல்கள் இன்றுவரை என் புத்தக அலமாரியில் இருக்கிறது.அதை சில நாட்கள் மறந்த நிலையில், மீண்டும் பைலை திறக்க தூண்டியது இத்திரைப்படம்.

 ஹாரர் ஒஃப் டிராகுலா, 1958 - ஆம் ஆண்டு பேய் திகில்ப்பட இங்கிலாந்து திரைப்பட இயக்குனரான டெரன்ஸ் ஃபிஷர் இயக்கத்தில் வெளிவந்தது.வெளிவந்த நேரம் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள ரசிகர்களாலும் விமர்சனர்களாலும் சிறந்த டிராகுலா திரைப்படங்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுவது குறிப்பிடதக்கதாகும்.இதில், முக்கிய நடிகர்களாக Peter Cushing, Christopher Lee and Michael Gough ஆகியோர் நடித்துள்ளனர்.இசையை ஜேம்ஸ் பெர்னார்ட் என்பவர் கவனிக்க, படத்துக்கு கூடுதல் சிறப்பான ஒளிப்பதிவில் ஜேக் ஆஷர் என்பவர் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய நண்பனான ஜோனாதன் ஹார்க்கர் மர்மமான முறையில் இறந்தைத் தொடர்ந்து, இவருடைய மரணத்திற்கு டிராகுலா காரணமாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார் டாக்டர் வேன் ஹெல்சிங்.கடைசியாக தன் நண்பன் அனுப்பிய கடித்தத்தின் வாயிலாக கடைசியாக தங்கிய மாளிகைக்கு வருகிறார்.வந்தவுடனே தன் நண்பனின் உடல் ஒரு பிணப் பெட்டியில் காண நேரிட, அதனைத் தொடர்ந்து டிராகுலாவை கொல்ல வேண்டிய வேட்டையில் இறங்குகிறார்.அடுத்தடுத்து சில மரணங்களும் நிகழ, இதற்கான காரணங்கள் என்ன ? டிராகுலாவை கொன்றாரா ? அல்லது அந்த முயற்சியில் தோல்வியடைந்தாரா ? என்பதை டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை...இல்லையென்றால் பதிவிறக்கம் செய்து பாருங்கள்...

மேற்ச்சொன்னது முடிந்தவரையில் சுருக்கமாக எழுத நினைத்த கதை..சில சிறப்பம்சங்களை விட்டுவிட்டுதான் முன்வைத்துள்ளேன்.இந்த படம் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் பாருங்கள்.கல்ட் கிளாசிக் என்று பலர் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்

பொதுவாக டிராகுலா படங்களை பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது.ஏனா பார்த்ததே ரெண்டுதான்.முன்பு சொன்னது போல, VAN HELSING திரைப்படம் பிரமாண்டத்தில் மாட்டிக்கொண்ட நிலையில், ஹாரர் ஒஃப் டிராகுலாவில் பிராமாண்டம் எல்லாம் இல்லீங்க.வெறுமனே கதையை வைத்துக்கொண்டு சிறிய பெட்ஜெத்தில் காட்சிகளை நேர்த்தியாகவே நகர்த்தியுள்ளனர்திரைக்கதையின் பலமும் அதிலேயே உள்ளது.

பழைய திரைப்படங்களில் முக்கியமாக என்ன இருக்கிறதோ இல்லையோ பின்னனி இசைக்கு மட்டும் பஞ்சமே இருக்காது.பல திறம்வாய்ந்த இசை ஆளுமைகள் இந்தியா மற்றும் அயல் நாடுகளில் உதித்த பொற்க்காலம் அது.அதிலும் திகில் திரைப்படங்களுக்கு சொல்லவே தேவையில்லைசைக்கோ, தெ ஒமென் போன்ற திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.அந்த திரைப்படங்களின் பின்னனி இசை இன்னும் என் மனதிலே இருக்கிறது.அதே வரிசையில் ஜேம்ஸ் பெர்னார்ட், இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவருக்கு மகனாக பிறந்த இங்கிலாந்தியர்.Seven Days to Noon (1950) என்ற படத்துக்காக ஆஸ்கர் வென்றவர்.இதிலும், பின்னி எடுக்கிறார்.திரைப்படத்தில் டிராகுலாவாக வரும் Christopher Lee பற்றி சொல்லியே ஆகனும்..அப்படியே டிராகுல மாதிரியே இருக்காரு..நல்ல நடிப்பு.    

இறுதியாக, ஹாரர் ஒஃப் டிராக்குலா - காட்சிகளில் வேகத்தை கம்மிப்படுத்திக்கொண்ட படம்வன்முறை காட்சிகளுக்காகவே அந்த டைமில் X ரேட்டிங்க் பெற்ற படம்.அதுவும் ஜப்பானிய வெர்ஷனில் இன்னும் அதிகமாக கொடூரங்கள் நிறைந்த படைப்பாம்.(யார் கண்டா ??) நீங்கள் பழைய படங்களை விரும்பி பார்ப்பவர் எனின், ஒரு முறை காணலாம்.ரசிக்கலாமா ? என்று கேட்டால் கட்டாயம் இல்லை.உலகளவில் இன்று ரசிகர்கள், விமர்சகர்களை கொள்ளைக்கொண்ட இப்படம், நான் இதுவரை கண்ட மர்மப்படங்களில் கொஞ்சம் கடைசி ரேங்கையே பிடித்துள்ளது.எதுக்கும் நீங்கள் பாருங்கள்...   

இயக்குனர் டெரன்ஸ் ஃபிஷர்

20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஃபிஷர், 1904-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 திகதி பிறந்தவர் ஆவார்.பிரிட்டிஷ் நடிகர்களான பீட்டர் கஷ்ஷிங் மற்றும் கிறிஸ்டோபர் லீ போன்றவர்களை முன்னணி நட்சத்திரங்களாக கொண்டு இவர் இயக்கிய திரைப்படங்களான டிராகுலா (1958), ஹவுன்ட் ஆப் த பாஸ்கர்வில்லாஸ் (1959) மற்றும் மம்மி (1959) போன்றவை இன்றுவரை  கிளாசிக் திகில் திரைப்படங்களாக விளங்குவது மட்டுமன்றி ஃபிஷரின் சிறந்த படைப்புகளாக கருதப்டுகின்றன.தொடர்ந்து டிராகுலாவை மையமாகக் கொண்டு வெளிவந்த திரைப்படங்களால் உலகலவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த இவர், ஜூன் 18 திகதி 1980 - ஆண்டு  தனது 76 வயதில் காலமானார்.

மீண்டும் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்.அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.உங்கள் ஆதரோவோடு,

Sunday 16 August 2015

Gems Of Classic Western : A Fistful of Dollars (1964)


அமெரிக்க நடிகர்களை பயன்படுத்தி ஐரோப்பிய சினிமாக்காரர்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள் ஸ்பகெட்டி அல்லது இத்தாலோ வெஸ்டர்ன் என்று அழக்கப்படுகின்றனஆரம்ப காலத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படங்கள் பின்னாளில் Once Upon A Time In West (1968) போன்ற படங்களின் மூலம் பெரிய ஹாலிவுட் ஸ்டூடியோக்களின் உதவியுடன் பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட்டு உலகளவில் வெளிவரப்பட்டன.அன்று வரை அமெரிக்க ஹிரோக்களுக்கு அடிமையான மக்களை அழுக்கு உடைகள், இறைச்சி & சோள உணவுகள் உண்ணும் மற்றும் எண்ணெய் வைக்காது வரண்டு வதங்கிப்போன முகங்கள் கொண்ட வெஸ்டர்ன் ஹீரோக்களுக்கு பாயச்செய்த திரைப்படங்கள் இவை.
==================================================================  
அகிரா குரோசாவா என்ற சினிமா மேதையை அறிந்திராத ரசிகர்கள் மிகவும் குறைவு..1961-ஆம் ஆண்டு இவர் இயக்கிய சாமுராய் திரைப்படம் யோஜிம்போ..சர்வதேச அளவில் சிறந்த படைப்பாக கருதப்படும் இப்படத்தின் தழுவலில் (சுட்டு, காப்பி எது வேண்டுமானாலும் சரி) சரியாக மூன்றாண்டுகள் கழித்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட படம்தான் A Fistful Of Dollars.

செர்ஜியோ லியோனி இயக்கிய டோலர்ஸ் டிரைலோஜியின் முதல் பாகமாக தயாரிக்கப்பட்டு 1964-ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அமெரிக்க இளம் நடிகரான கிளிண்ட் ஈஸ்ட்வூட்டின் நடிப்பாற்றலுக்கும், என்னியோ மொரிக்கன் என்ற இசை ஆளுமைக்கும் மிகப் பெரிய தொடக்கமாக அமைந்ததோடு உலக பிரசித்தி பெறச் செய்தது எனலாம்..அதுவரை துணை இயக்குனராகவும் கதை, திரைக்கதை ஆசிரியராகவும் 1961-ஆம் ஆண்டு Il Colosso di Rodi என்ற ஒரே படத்தை இயக்கிருப்பினும், லியோனிக்கு சர்வதேச அளவில் மிக பெரிய பெயரையும் சினிமா வசதிகள் பெருமளவில் இல்லாத சமயத்தில் பல ரசிகர்கள் முக்கியமாக ஹாலிவுட்டின் பார்வைகள் தன் பக்கம் திரும்ப காரணமாகவும் அமைந்தது.

நிலையாக ஓரிடம் தங்காது அதிகம் பேசுவைதவிட கையால் எதிரிகளை கவனிக்கும் பெயரில்லாத துப்பாக்கி வல்லவன், ஊரில் வாழும் மக்களை துன்புறுத்தி வதைக்கும் Baxters மற்றும் Rojo இரண்டு எதிரி கும்பல்களின் நம்பிக்கைக்கு ஆளாகி அவர்களையே வீழ்த்த முயற்சிக்கும் போராட்டங்களை பதிவு செய்யும் படமிது.எளிமையான கதை, சுவாரஸ்யங்கள் நிறைந்த திரைக்கதை என்று பார்வையாளர்களை எளிதில் கட்டிப்போடக்கூடிய விதத்தில் எடுக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

கதை, காட்சிகள் என்று யோஜிம்போவின் சாயலை பல இடங்களில் இத்திரைப்படம் கொண்டிந்தாலும், திறமைமிக்க இயக்கம், நடிகர்களின் தனிப்பட்ட நடிப்பு, கேமரா கோணங்கள் மிக முக்கியமாக மொரிக்கோனின் இசை ஆகியவற்றின் துணையோடு தனக்கே உரிய இடத்தில் இத்திரைப்படம் நிற்கிறது.செர்ஜியோ லியோனியின் ஆஸ்தான இசையமைப்பாளரான என்னியோ மொரிக்கொன், உருவாக்கிய விசில் ஒலிகள், கோரஸ் குரல்களை யாரால் மறக்க முடியும்..?? அதுவும் அத்தனையும் ரிதமிக்கான டீம்கள்.சோகங்கள் நிறைந்த மனதை தாளம் போட வைக்கும் ரகத்தில் இருப்பவை.. 

கிளிண்ட் ஈஸ்ட்வூட் போன்ற அமெரிக்க நடிகர்களையும் Gian Maria Volonté, Marianne Koch, Wolfgang Lukschy போன்ற ஐரோப்பிய நடிகர்கள் நடித்த இந்த படத்தை நடிப்புக்காகவே பல முறைகள் பார்க்கலாம்..
அதுவும் கிளிண்ட் ஈஸ்ட்வூட் புகை பிடிக்கையில், பார்வைகளில் தென்ப்படும் ஸ்டைல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்..அவ்வளவு தெனாவட்டான நடிப்பு படம் முழுவதும்.இதற்கு எதிர் மறையான கதாபாத்திரத்தில் மரியா வொலுண்டே, Rojo என்பவராக வந்து அப்படியே நெஞ்சை கவர்கிறார்.அதுவும் இறுதி காட்சியில், ஈஸ்ட்வூட் அசால்ட்டாக ஐந்து பெரின் துப்பாக்கி முனையில் நடந்துவர தூரத்திலிருந்து சுடும் காட்சி இருக்கிறதே......அருமை..என்ன அழகான கிளோஸ் அப் மற்றும் லோங்க் ஷாட் காட்சி அது.காட்சியின் உணர்ச்சியை ஒவ்வொரு நடிகனின் முகப்பார்வைகளில் தென்பட வைத்திருக்கிறார் இயக்குனர்.அதுவும் ஒவ்வொரு குண்டாக சுட வொலுண்டேயின் முகத்தில் ஏற்ப்படும் மாற்றமும் பயமும் அப்படியே கண்ணில் நிற்கிறது.

1964 - ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட எ ஃபிஸ்ட்ஃபுல் டோலர்ஸ் படம் உலகளவில் வெற்றிப்பெறவே அகிராவின் பார்வைகளுக்கும் எட்டியது.தன்னுடைய படத்தை அதுவும் அனுமதி ஏதும் இன்றி மறு ஆக்கம் செய்தமைக்காக நீதி மன்றத்தில் குற்றம்சாற்றி தயாரிப்பாளர்களிடமிருந்து சட்ட ரீதியில் வசூலில் 15 சதவீத தொகையையும் பெற்றுக்கொண்டார் அகிரா.

படத்தில் எண்ணற்ற காட்சிகள் சொல்ல இருக்கின்றன..எப்பொழுதும் விலாசமான கேலி சிரிப்புடன் படம் முழுக்க ஒருவர் வில்லன் கும்பலில் வருவார்.அதுவும் ஈஸ்ட்வூட்டை போட்டு அடிப்பின்னும் காட்சியில் இவர் சிரிக்கும் போது மனதுக்கு எரிச்சல் வருகிறது. மற்றவனின் துன்பத்தில் இன்பம் காணுகின்றன பேய்கள் என்று மறைமுகமாக இயக்குனர் சொல்லுகிறாரோ என்னவோ தெரியவில்லை இயக்குனர்.

ஊரே எதிரியாக பார்க்கும் ஈஸ்ட்வூட்டுக்கு ஒரே ஆதரவாக, துணையாக வருவது விடுதி காப்பாளராக வரும் சில்வனிடோ மற்றும் சவப்பெட்டிகள் செய்பவராக வரும் பிரிப்பேரோ ஆகிய கதாபாத்திரங்கள்..அதுவும் பிரிப்பேரோவின் எக்ஸ்பியஷங்களும் ஈஸ்ட்வூட் உடனான காட்சிகள் அத்தனையும் சிறப்பு..எப்பொழுதும் அரைகுறையான வசனங்கள் நிறையவே லியோனியின் படங்களில் இருக்கும்..அத்தனையும் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.

இது கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்..வெஸ்டர்ன் படங்கள் பார்க்க தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்திலிருந்து ஆரம்பிப்பது மிக்க நன்று.இந்த படத்தை பற்றி இன்னொரு நாள் கதை, காட்சிகளை பற்றி நீண்ட தொடராக போட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் அது நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு...மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..
அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.
உங்கள் ஆதரோவோடு,

Tuesday 11 August 2015

Sergio Leone Masterpieces..

திரைப்பட மாணவர்களுக்கு இவர் ஒரு பாடம், திரை ரசிகர்களுக்கு இவர் ஒரு கொண்டாட்டம்..கிளாசிக் வெஸ்டர்ன் படங்களுக்கு புது மரியாதையும், புது அத்தியாயத்தையும் உருவாக்கி தந்த உன்னதமான சினிமா மேதை.
இத்தாலியில் ஜனவரி  மூன்றாம் திகதி 1929-ஆம் ஆண்டு பிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், கதை மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார்.விக்டோரியோ டி சிக்கா இயக்கிய பைசிக்கல் டீஃப் என்ற படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய லியோனி, தொடர்ந்து Quo Vadis (1951) மற்றும் Ben-Hur (1959) போன்ற சர்வதேச மிக பெரிய பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டு விருதுகளையும் வசூலையும் வென்று குவித்த படங்களில் துணை இயக்குனராக பணிப்புரிந்தார்.அதே வேளையில், அப்பொழுது தயாரிப்பில் இருந்து சில காரணங்களால் முழுமை பெறாது தவறிப்போன The Last Days of Pompeii (1959) என்ற படத்தின் ஒரு பகுதிக்கு இயக்குனராக பணிப்புரியும் வாய்ப்பும் இவருக்கும் கிடைத்தது. 

1950-ஆண்டுகளில் பல வரலாற்று கதைகள், கத்தி சண்டைகள் நிறைந்த சாகச கதைகள் போன்றவற்றில் ஆர்வங்கள் கொண்டிருந்த லியோனிக்கு, முதல் வாய்ப்பாக அமைந்ததுதான் The Colossus of Rhodes (1959) என்ற சாகச படம்.இதன் மூலம் தன்னை திறமிக்க, இத்தாலியில் கவனிக்கத்தக்க இயக்குனராக அடையாளம் காட்டிக்கொண்டார்.சின்ன பட்ஜெட்டில் ஹாலிவுட்டுக்கு நிகரான படங்களை எடுக்கும் பாணியும் திறமையும் பலருக்கு தெரிய வந்தது.அதுவரை அமெரிக்க தொலைக்காட்சியில் சிறிய வேடங்களிலும் சில திரைப்படங்களில் தலையை காட்டி வந்த கிளிண்ட் ஈஸ்ட்வூட்டுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படமான A Fistful of Dollars (1964) இயக்கினார்.அகிரா குரோசாவா இயக்கிய யோஜிம்போ படத்தின் தழுவலான இந்த படம் உலகளவில் வெற்றிப்பெறவே இதனது 


அடுத்த பாகங்களாக For a Few Dollars More (1965) மற்றும் The Good, the Bad and the Ugly (1966) என்ற படங்களையும் எடுத்து உலக திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெறத் தொடங்கினார் செர்ஜியோ லியோனி...பெயரில்லாத துப்பாக்கி கலைகள் தெரிந்த வாடிப்போன முகத்தோடு ஈஸ்ட்வூட் நடித்த இம்மூன்று படங்களே இன்று டோலர்ஸ் டிரைலோஜியாக விளங்குகிறது.இத்தாலியில் சிறிய பட்ஜெட்டில் உருவெடுத்த இப்படங்கள், உலகமெங்கும் வசூலை வாரி குவித்தது.சிறிய வயதில் தன்னுடன் படித்த பள்ளி நண்பனான என்னியோ மொரிக்கொன் என்ற இசையமைப்பாளருடன் இவர் இணைந்து உருவாக்கிய புதுமையான வெஸ்டர்ன் வாசங்கள் வீசும் சப்தங்கள், டீம் இசையென்று ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டன.இன்றுக்கூட வெஸ்டர்ன் படங்கள் என்று சொன்னாலே இந்த இசை தான் ஞாபகத்தை எட்டும் என்று சொல்லும் அளவுக்கு படத்தின் வெற்றிக்கு கூடுதல் காரணமாகவே அமைந்தது.


டோலர்ஸ் டிரைலோஜிக்கு பிறகு, வெஸ்டர்ன் படங்களிலிருந்து விலக வேண்டும் என்று நினைத்த லியோனிக்கு மேலும் ஒரு சவாலாக சிறந்த வாய்ப்பாக அமைந்தது ஹேன்ரி ஃபோண்டா மற்றும் சார்ல்ஸ் பிரோஸன், ஹார்மோனிக்காவாக நடித்த Once Upon a Time in the West (1968) என்ற இன்னொரு வெஸ்டர் படம்தான்..அமெரிக்க ஸ்டூடியோவான பாராமௌண்ட் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்த படத்தை இயக்கி கொடுத்தார்.தன்னுடைய நீண்ட கால நண்பர்களான Sergio Donati மற்றும் Ennio Morricone முறையே துணை திரைக்கதை மற்றும் இசை அமைக்க, பின்னாளில் திரைப்பட இயக்குனர்களாக உருவான Bernardo Bertolucci மற்றும் Dario Argento ஆகியோர் கதையை புனைந்தனர்.பல அமெரிக்க வெஸ்டர் படங்களின் தாக்கங்கள் நிறம்பி வழிந்தாலும், லியோனியின் இயக்கமும் நடிப்பும் இப்படத்தை உயர்ந்து நிற்க செய்தது. உலக அளவில் இதுவரை எடுக்கப்பட்ட வெஸ்டர்ன் படங்களிலேயே சிறந்த படைப்பாகவும் இது கருதப்படுவது குறிப்பிடதக்கது.

அதனை தொடர்ந்து, 1973 ஆம் ஆண்டு வந்த Duck, You Sucker! (1971) என்ற படம் மேலும் லியோனிக்கு புகழை தேடி தந்தது.இம்முறை மெக்ஸிகோவின் புரட்சியை பின்னனியாக வைத்து திரைக்காட்சிகளை பின்னியிருந்தார்.இதன் பின், திரைப்பட இயக்கத்திலிருந்து வெளிவந்து My Name is Nobody (1973), A Genius, Two Partners and a Dupe (1975 போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் லியோனி..

The Hoods  என்ற தனக்கு பிடித்த நாவலுக்கு திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாகவே லியோனிக்கு இருந்தது.1920 மற்றும் 1930-களில் நியூயோர்க் நகரத்தில் வாழ்ந்த யூத குண்டர்களை பற்றிய கதை இது.இக்கதைக்காகவே, முதலில் கிடைத்த காட்ஃபாதர் (1972) படத்தை இயக்கும் வாய்ப்பையே புறக்கணித்தார்.இந்த படம் பின்னாளில் போர்ட் கொப்போலா இயக்கத்தில் சிறந்த படமாக வந்தது அனைவரும் அறிந்ததே.பல வருடங்கள் கழித்து இறுதியில் இந்த கதையை ரோபெர்ட் டி நீரோ மற்றும் ஜேம்ஸ் வூட்ஸ் நடிப்பில் சுமார் நான்கு மணி நேரங்கள் நெஞ்சை அள்ளும் படைப்பாக Once Upon a Time in America (1984) தந்தார்.இத்திரைப்படம் முதல் முறையாக லியோனிக்கு சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் மற்றும் பாஃப்தா பரிந்துரைகளை பெற்று தந்தன.

வெஸ்டர்ன் மட்டுமல்லாது சினிமாவுக்கு புதிய பரிணாமத்தை வழங்கிய செர்ஜியோ லியோனி என்ற சினிமா ராஜ்யம் ஏப்ரல் 30 ஆம் திகதி 1988-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.தன்னுடைய 60 ஆவது வயதில் மாரடைப்பில் காலமானார்.மொழி, நாடு என்று பலவற்றை கடந்து சினிமா உலகில் பலரையும் கவர்ந்த சிறந்த கைத்தேர்ந்த படைப்பாளிகளில் ஒருவராக லியோனியை சொல்லலாம்.பல புகழ்பெற்ற கலைஞர்களை திரைப்படத்துறைகளுக்கு அறிமுகபடுத்தியதோடு புகழ்ப்பெற செய்ததற்கும் காரணமாக இருந்த லியோனி, இன்று படைப்புகளின் மூலம் உயிர் வாழ்கிறார் என்பதே உண்மை..இவர் எடுத்த படங்கள் வெறும் வெஸ்டர்ன் மற்றும் சாகச படங்கள் மட்டுமில்லை, உண்மையாக கலையை நேசித்த, பல திரை யுக்த்திகளை வழங்கிய மனிதனின் காவியங்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்து..ஒரு சினிமா ரசிகர்களாக இருந்து இவரது படங்களை மறக்காமல் இருப்பதே இவருக்கு கொடுக்கும் மிகப்பெரிய விருது மற்றும் கடமை என்று நினைக்கிறேன்.   

@@ செர்ஜியோ லியோன் - உலக விருதுகள் பெறாத பல சினிமா உள்ளங்களில் வாழும் கலைஞன். @@  

 அடுத்தடுத்த பாகங்களில் செர்ஜியோ லியோனியின் டோலர் டிரைலோஜி மற்றும் பிற படைப்புகளை சிறு பார்வைகளாக பார்க்கலாம்.அதுவரை,



உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...