A Film By Majid Majidi
Stars : Hossein Mahjoub, Mohsen Ramezani and Salameh Feyzi
ஈரானியத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் பலருக்கும் மஜித் மஜிதி அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் ஈரானிய சினிமாவை உலகளாவிய நிலையில் தன் பக்கம் திருப்பிய ஈரானிய கலைஞர்களில் முக்கியமான பங்கு இவர்க்கு உண்டு..தொடர்ந்து உலகத்தர திரைப்படங்களை சினிமா பார்வையார்களுக்கு வழங்கிவரும் ஈரானிய சினிமாவில் இவர் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.இவரது Children Of Heaven (1997) மற்றும் Baran (2000) போன்ற திரைப்படங்கள் உலகளாவிய நிலையில் பல விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருதுக்காக ஈரான் நாட்டிலிருந்து பரிந்துக்கப்பட்ட முதல் படமாக சில்ட்ரன் ஒஃப் ஹேவன் திரைப்படம் விளங்குகிறது.
1999-ம் ஆண்டு வெளிவந்த கலர் ஒஃப் பாரடைஸ் திரைப்படம் - இவரது முந்தைய படைப்பான சில்ட்ரன் ஒஃப் ஹேவன் என்ற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உலகளவில் பல விருதுகளைப் பெற்றதோடு விமர்சக மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.கண் பார்வையற்ற ஒரு இளம் வயது சிறுவனுக்கும் தன் தந்தைக்கும் இடையிலான உறவை, சிறப்பான முறையில் மஜிதி எனும் உலக தரம் வாய்ந்த படைப்பாளன், தனக்கே உரிய பாணியில் உருவாக்கிய இப்படைப்பினை ஒரு முறையாவது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியது அவசியமே.
ஏனெனில் மொழி என்பது திரைக்காட்சிகளில் பெரும்பாலும் அவசியம் இல்லாமல் போகிறது. கதையோடு கலந்த காட்சியமைப்புகளும், காட்சிகளோடு கலந்த கதாபாத்திரங்களும் வார்த்தைகளை தாண்டி மாய வலையை பார்வையாளனின் கண்களில் விரிக்கக்கூடியவை.இதனை வார்த்தைகளாக சொல்வதைவிட அனுபவத்தாலே உணர்ந்திட முடியும்..திரைக்கதைக்கு தேவையே இல்லை என்றாலும், நிர்வாணம் அல்லது ஆபாச காட்சிகள் ஒன்றாவது புகுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வளவு கெடுபிடியான, கடுமையான சென்சாருக்கு நடுவில் வெளிவரும் ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது.
மொஹம்மட் என்ற முதன்மை கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருக்கும் Mohsen Ramezani.. யாரென்றுக்கூட தெரியவில்லை இந்த சிறுவனை..கண் பார்வையற்ற உலகின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.நிஜ வாழ்க்கையில் கண்களை இழந்த நடிப்புலக இளவரசன்..வயதில் சிறியவராக இருப்பினும் முதிர்ச்சியான நடிப்பு இவரது.நேர்த்தியான விதத்தில் அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, கண்களில் ஒத்திக்கொள்ளலாம்..கொள்ளை அழகு.. சினிமாவின் தரத்தை நிர்ணையிக்கும் கவித்துவமான காட்சிகளை சுற்றி கோலமிடுகிறது.
கண் பார்வைகளை இழந்தவர்களின் வாழ்க்கை, அபூர்வமானது : சோகமானது... குற்றங்கள் செய்யாமலேயே ஆயுள் கைதியாக வாழ்வதை போன்றது..கை, கால்கள் என்று அனைத்துமே நன்றாக இருக்கும் நம்மில் பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பல வேளைகளில் எல்லாம் முடிந்துவிட்டது, வாழ்க்கையே போய்விட்டது என்று சொல்லிக் கொள்கிறோம்.என்னை பொருத்தவரை குறைகளில் பெரியது சிறியது என்று எதுவும் இல்லை.காரணம் அவை எல்லாமே மனிதற்கு துன்பத்தை தரக்கூடியதே..அதுவும் ஏழைக்கு அந்த நிலமை வரும்போது..இறைவன் அவர்களுக்கென்று துணையை கொடுக்கிறார்.. வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறார். நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறார்..
2000ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ஈரான் நாட்டிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட படைப்பிது.இறுதி நேரத்தில் ஆஸ்கரால் புறக்கணிக்கபட்டது கொடுமை.ஈரானிய சினிமாவை இன்னொரு தரத்துக்கு கொண்டு சென்ற இப்படைப்பை, ரசிகர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய அனுபவம் ஆகும்.
.
என்றாவது ஒரு நாள் ஈரானிய சினிமாவை பற்றியும் அதனது வளர்ச்சியை பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.அதுவரை உங்களை கவர்ந்த ஈரானிய திரைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.சற்று உதவியாக இருக்கும்.பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.
புதிதாக சினிமா டைரி, page ஒன்று உருவாக்கிருக்கிறேன் நண்பர்களே..பார்க்கும்
படங்களின் சிறிய தொகுப்பாக இருக்கும் என நம்புகிறேன்..புதிதாக துப்பாக்கி போன்ற படங்கள்
பற்றி எல்லாம் எழுதி இருக்கேன்..படிச்சிட்டு முடிந்தால் உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி.