Tuesday 25 December 2012

Hugo (2011)..

வணக்கமுங்க..இவ்வளவு நாட்களாக என்னையும் மதித்து என்னுடைய எழுத்துக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எல்லா வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன்.. நீங்கள் அன்றி நான் யேது..வாங்க இன்றைய பார்வையை கொஞ்சம் பார்க்கலாம்..  

மார்ட்டின் ஸ்கார்சஸி என்னும் திரைக்கலைஞனின் மீது வெகுவான அபிப்ராயம் எனக்குள் எப்பொழுதும் உண்டு.அநேகமாக அது டாக்ஸி டிரைவர் கண்ட போது தொடங்கிருக்க வேண்டும்.இவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் நான் தங்க சுரங்கங்களாக எண்ணுகிறேன், மதிக்கிறேன்.அமெரிக்க சினிமாவுக்கு புது பரிணாமத்தை வழங்கி உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி பாடுப்பட்டு வரும் இயக்குனர்களில் ஸ்கார்சஸி முக்கியமானவர்.

அதற்கு இன்னொரு சான்றாக சென்ற வருடம் (2011) வெளிவந்து ஐந்து ஆஸ்கர்களை கொத்திக்கொண்டு பறந்த படைப்புதான் ஹூகோ..சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, ஐஎம்டிபியில் இந்த படத்தலைப்பை படித்த போதே மனம் எங்கோ சிறகடித்தது. அந்த நான்கெழுத்து பெயர் எதையோ தீவிரமாக சொல்லப் போவதை உணர்ந்திருந்தது போலும்...
எதிர்ப்பார்ப்புகளுக்கு குறைகள் வைக்காது, இறந்துப்போன தன் தந்தைக்காக இயந்திர மனிதனை இயங்க வைக்கும் பணியை முழுமையாக்க போராடும் ஹூகோ காப்ரட் என்ற கதை நாயகனின் உணர்வுகளை தடைகள் இல்லாது, பலரும் மறந்துப்போன ஒரு சினிமா மேதையின் நினைவுகளை பகிர்ந்து ஓர் அழகான கதையை பதித்து செல்கிறது திரைப்படம்.

பரபரப்பான கதைக்களம், ஆஸ்தான நடிகர்களான டி காப்ரியோ, டி நீரோ ஆகிய அம்சங்கள் எதுவும் இல்லாது, சிறுவனை மையப்படுத்தி தனது அடுத்த படத்தை ஸ்கார்சஸி இயக்க போகிறார் என்ற செய்தி வந்ததும் பலரும் நம்பிருக்க மாட்டார்கள் (என்னையும் சேர்த்து).""அதுவும் அடிதடி, அரட்டைகள், ரத்தம், கெட்ட வார்த்தைகள் தவிர்த்து இயக்குனருக்கு படம் பண்ண தெரியாது..கண்டிப்பாக இது மொக்கை படமாதான் ஆகும்"" என்று சிலர் சொல்லிருந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.ஆனால், தன்னாலும் இது போன்ற சமச்சாரங்கள் இல்லாது சிறந்த படைப்பை தர முடியும் என்பதை குண்டுன் (1997), லாஸ்ட் டெம்பெட்டேஷன் ஒஃப் ஜீசஸ் கிரைஸ்ட் ஆகியவை மூலம் நிரூபித்தும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.அந்த வரிசையில் இன்னும் பத்தாண்டுகளுக்கு இயக்குனரின் பெயரை சொல்லும் வகைக்கேற்ப உருவெடுத்துள்ளது ஹுகோ திரைப்படம்.படத்தின் மிக முக்கியமான மூன்று கதாபாத்திரங்களாக ஹூகோ, ஜோர்க் மெல்லிய்ஸ், இசபெல்..

ஹுகோவாக Asa Butterfield - இந்த சின்ன பையனை பற்றி சொல்லாமல் விட்டால் இது நாள் வரை எழுதிய "பார்வைகளுக்கு" அர்த்தம் இல்லாமல் போய்விடும்.ஒரு பெரிய இயக்குனர், குழுவினரின் படத்தில் நடிக்கிறோம் என்ற சிறிய அச்சமும் முகத்தில் தெரியவில்லை.நல்ல இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்து சில இடங்களில் தோல்வியை அடைந்தாலும் அருமையான பங்களிப்பை திகட்டாமல் வழங்கிருக்கிறார்.ஒரு வகையில் படத்தின் முதுகெலும்பே இவரது தோளில்தான்.காரணம், கதையின் சாராம்சமான ஜார்ஜ் மெல்லியஸ் என்ற திரை மேதையை திரையில் அறிமுகப்படுத்தும் பணியே இவரதுதான்.

ஜோர்ஜ் மெல்லியஸாக பென் கிங்ஸ்லி - இவரது கதாபாத்திர சிறப்பை விவரிக்க தனி கட்டுரை போட வேண்டும்.சுருக்கமாக கூறின், சினிமாவின் தொடக்கக்காலத்துக்கு பயணிக்க வேண்டும்.குறிப்பாக, 1890, 1910, 1920 ஆண்டுகளில் சினிமாவில் பல டெக்னிக்கல் அம்சங்களை புகுத்திய ஜார்ஜ் மெல்லியஸ் என்ற ஃப்ரான்ஸ் நாட்டினரை நம்மில் எத்தனை சினிமா ரசிகர்கள் ஞாபகத்தில் கொண்டிருப்போம் என்பது பில்லியன் டோலர் கேள்விதான்.The Invention of Hugo Cabret என்ற புதினத்தின் தழுவலில் அந்த கேள்விக்கு சிறு விடையை தரும் படம்தான் ஹூகோ.நம்ம ஏழாம் அறிவில் நம்ம போதி தர்மரை போல முழுவதுமான மெல்லியஸின் வரலாற்றை இத்திரை சொல்லவில்லை எனினும் ஓரளவு அறிந்துக்கொள்வதற்கு துணைப் புரிந்துள்ளது என்பதே நிஜம்.அவரை பற்றிய வரலாற்றை அறிவதற்கு இங்கு செல்லவும்.அதோடு மெல்லியஸ் எடுத்த நூற்றுக்கணக்கான படங்களில், பல இன்று YOUTUBE -ல் கொட்டிக்கிடக்கிறது..அதையும் தரிசித்து விடுங்கள்.இல்லை அவரது ஆவி எழுந்துவந்துடும்.


இசபெல்லாக Chloë Grace Moretz - நாயகனின் தோழியாக வந்து தனது அழகான தோற்றத்தாலும் படப்படப்பான முக பாவனைகளாலும் மனதை அலங்கரிக்கிறார்.மேலும், கதைச்சூழல்களை மேம்படுத்தும் இணைக்கும் பாத்திரமாக வலம் வருகிறார்..இன்னும் சில ஆண்டுகளில் ஹிரோயின் ஆகினாலும் நோ டவுட். 

இவர்களைத் தவிர்த்து, எவன் கிடைப்பான் கைது செய்யலாம் என்ற குறிக்கோளில், கூடவே பிடிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட நாயை உடன் கொண்டு ஸ்டேஷனை சுற்றி வரும் ரயில்வே இன்ஸ்பெக்டர் Gustave கேரக்டரில் Sacha Baron Cohen..எந்த பையன் போனாலும் நண்டுக்கண்ணில் பார்ப்பதும், அனாதையாக ஒருவன் சிக்கிவிட்டால் குற்றங்களைச்சாட்டி அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைப்பதும் என இவரது அட்டகாசமான நடிப்பாற்றல் படமுழுவதும்.

பக்கத்தில் வருபவர்களை தள்ளிவிட்டு ஹூகோவை பிடிக்க துரட்டுவதும் பிறகு ரயில் கதவில் சிக்கிக்கொள்வதும், இறுக்கமான முகத்தில் பெண்ணை பார்த்ததும் சிரிக்க முயற்சிப்பதும் என பல சுவாரஸ்யங்களை அடக்கிய இவரது பாத்திரம், கதையை தொய்வில்லாது கொண்டு செல்ல உதவி செய்கிறது.சில நிமிடங்களே வரும் ஜூட் லா பாத்திரம் கூட மனதுக்கு நிறைவையே தருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜானி டெப் பற்றி நமது நண்பர் JZ ஒரு தொடரே எழுதிக்காரு.அதையும் இந்த கிளிக் செய்து படிங்க .....இதானே வேணானு சொல்றது, இந்த பதிவு படிச்சு, பின்னூட்டம் முடிச்சுட்டு போங்க.ஓகே.

1920 ஆண்டுகளில் பேரிஸ் நகரம் - வியக்கத்தக்க விந்தையான கற்பனைகளை கண் முன்னே தெளித்துவிட்டு பிரமிக்க வைக்கிறது. "ஐ சே..இந்த படத்த திரையரங்குகளில் பார்க்காம போய்ட்டோமே" என்று நெஞ்சம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அலட்டிக்கொண்டது.அவ்வளவு நேர்த்தி.படக்குழுவினர்களின் ஆய்வும் உழைப்பும் முயற்சிகளும் கண்களுக்கு காட்சிகளின் ஊடே புலப்படுகிறது.படம் துவங்கியதும் உயரத்திலிருந்து கேமரா அப்படியே லாவகமாக ஊர்ந்துச்செல்ல இறுதியாக அந்த பையன் ஒளிந்திருக்கும் 4 எண்ணை கடிகாரத்தில் காட்டும்பொழுது "யெப்பா" என இருந்தது.இவ்வளவு அழகான ஒரு படத்தை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. அவ்வளவு நிறைவு.படத்தின் மற்ற குறைகளை மறைக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. 

"சினிமா ஒரு கனவு தொழிற்ச்சாலை" - எங்கேயோ எப்பொழுதோ படித்த ஞாபகம்.உண்மைதான் என்று என் மனம் இன்று குழப்பிக்கொள்கிறதுகடந்தக்கால குறிப்புகளை, எதிர்க்கால கனவுகளையும் கற்பனைகளையும், நிகழ்க்கால நடைமுறையையும் ஒன்றிணைக்கின்ற பாலமாக சினிமாவை கருதுகிறேன்.இதில் மாற்று கருத்துக்கள் பல இருக்கலாம்.ஆனால், நான் நம்பும் ஒன்று.அவைகளை ஒரு தடவை நினைத்து பார்க்க சொன்னது ஹூகோ திரைப்படம்.இன்றைய சூழலில் சினிமா அன்றைய காலத்தில் ஒரு வியப்பு.திரையில் ஒரு ரயில் வந்தால் எங்கே நம்மை வந்து மோதிவிடுமோ என்று பயந்த ரசிகர்களை கண் முன் கொண்டுவந்தது இப்படம்.இப்பொழுது இது போன்றவை நகைச்சுவையாக இருக்கலாம்.ஆனால், கடந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கும் சினிமாவில் கடந்தக்கால நினைவுகள் திரைப்பட ரசிகர்களாக நமக்கு என்றுமே சுகம்தான்.
இறுதியாக ஹூகோ - மார்ட்டின் ஸ்கார்சஸியின் ஆகச்சிறந்த படமா ?? எவறேனும் கேட்டால் ?? இல்லை என்றே பதிலளிப்பேன்.ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கும் கதை வேறொரு திசையில் முடிவதுப்போல் அமைவதை தடுக்க முடியவில்லை.ஆனால், கடந்த நாற்பது வருடக்கால திரை வாழ்வில் எட்டிப்பார்க்காத, சொல்லிறாத களத்தை திரையில் முன்வைக்க முயன்றிருக்கிறார் ஸ்கார்சஸி.அவரது அனுபவமே அதனை நேர்த்தியான ஒன்றாக மாற்றிருக்கிறது. அதற்கு பக்க பலமாக விமர்சகர்களும் சினிமா புள்ளிகளுமே துணை நிற்கின்றனர்.இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை பார்த்துவிட்டு கூறிய வார்த்தைகள் இவை "It is magical to watch. This is absolutely the best 3D cinematography I've ever seen."எத்தனை காலதாமதமானாலும் சரி, திரை ரசிகர்கள் ஒரு போதும் தவற விடக்கூடாத 3டி திரைப்படமாக ஹூகோவை..அனைவரும் கண்டுக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
_____________________________________________________________

_____________________________________________________________

ஏண்டா இந்த படம் பார்க்குறதுக்காடா இவ்வளவு நாட்கள் ஆனது-ன்னு யாராவது கேட்கலாம்..கேட்கனும்.படம் பார்த்து சில மாதங்கள் ஆகினாலும், அதே டைமில் எழுதிய திரைப்பார்வை இது.தொடர்ந்து வெளியிட முடியாததால், இந்த வருடத்தின் இறுதி பதிவாக... உலகமெங்கும் வாழும் அன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு விடைப்பெறுகிறேன்.நன்றி.  

உங்கள் ஆதரோவோடு,

Thursday 29 November 2012

Color Of Paradise (1999) பார்வையில்லா உலகம்

A Film By Majid Majidi
Stars : Hossein Mahjoub, Mohsen Ramezani and Salameh Feyzi

ஈரானியத் திரைப்படங்களை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் பலருக்கும் மஜித் மஜிதி அவர்களைப் பற்றி தெரிந்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் ஈரானிய சினிமாவை உலகளாவிய நிலையில் தன் பக்கம் திருப்பிய ஈரானிய கலைஞர்களில் முக்கியமான பங்கு இவர்க்கு உண்டு..தொடர்ந்து உலகத்தர திரைப்படங்களை சினிமா பார்வையார்களுக்கு வழங்கிவரும் ஈரானிய சினிமாவில் இவர் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.இவரது Children Of Heaven (1997) மற்றும் Baran (2000) போன்ற திரைப்படங்கள் உலகளாவிய நிலையில் பல விருதுகளை வென்றதோடு, ஆஸ்கர் விருதுக்காக ஈரான் நாட்டிலிருந்து பரிந்துக்கப்பட்ட முதல் படமாக சில்ட்ரன் ஒஃப் ஹேவன் திரைப்படம் விளங்குகிறது.

 1999-ம் ஆண்டு வெளிவந்த கலர் ஒஃப் பாரடைஸ் திரைப்படம் - இவரது முந்தைய படைப்பான சில்ட்ரன் ஒஃப் ஹேவன் என்ற திரைப்படத்திற்கு சற்றும் குறைவில்லாமல் உலகளவில் பல விருதுகளைப் பெற்றதோடு விமர்சக மற்றும் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.கண் பார்வையற்ற ஒரு இளம் வயது சிறுவனுக்கும் தன் தந்தைக்கும் இடையிலான உறவை, சிறப்பான முறையில் மஜிதி எனும் உலக தரம் வாய்ந்த படைப்பாளன், தனக்கே உரிய பாணியில் உருவாக்கிய இப்படைப்பினை ஒரு முறையாவது அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டியது அவசியமே.

ஏனெனில் மொழி என்பது திரைக்காட்சிகளில் பெரும்பாலும் அவசியம் இல்லாமல் போகிறது. கதையோடு கலந்த காட்சியமைப்புகளும், காட்சிகளோடு கலந்த கதாபாத்திரங்களும் வார்த்தைகளை தாண்டி மாய வலையை பார்வையாளனின் கண்களில் விரிக்கக்கூடியவை.இதனை வார்த்தைகளாக சொல்வதைவிட அனுபவத்தாலே உணர்ந்திட முடியும்..திரைக்கதைக்கு தேவையே இல்லை என்றாலும், நிர்வாணம் அல்லது ஆபாச காட்சிகள் ஒன்றாவது புகுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இவ்வளவு கெடுபிடியான, கடுமையான சென்சாருக்கு நடுவில் வெளிவரும்   ஈரானிய திரைப்படங்கள் உலகத்தரத்தில் அமைவது மிகுந்த ஆச்சரியத்தையே கொடுக்கிறது.

மொஹம்மட் என்ற முதன்மை கதாபாத்திரத்துக்கு உயிரை தந்திருக்கும் Mohsen Ramezani.. யாரென்றுக்கூட தெரியவில்லை இந்த சிறுவனை..கண் பார்வையற்ற உலகின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்.நிஜ வாழ்க்கையில் கண்களை இழந்த நடிப்புலக இளவரசன்..வயதில் சிறியவராக இருப்பினும் முதிர்ச்சியான நடிப்பு இவரது.நேர்த்தியான விதத்தில் அமைந்திருக்கும் ஒளிப்பதிவு, கண்களில் ஒத்திக்கொள்ளலாம்..கொள்ளை அழகு.. சினிமாவின் தரத்தை நிர்ணையிக்கும் கவித்துவமான காட்சிகளை சுற்றி கோலமிடுகிறது.

கண் பார்வைகளை இழந்தவர்களின் வாழ்க்கை, அபூர்வமானது : சோகமானது... குற்றங்கள் செய்யாமலேயே ஆயுள் கைதியாக வாழ்வதை போன்றது..கை, கால்கள் என்று அனைத்துமே நன்றாக இருக்கும் நம்மில் பலரும் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பல வேளைகளில் எல்லாம் முடிந்துவிட்டது, வாழ்க்கையே போய்விட்டது என்று சொல்லிக் கொள்கிறோம்.என்னை பொருத்தவரை குறைகளில் பெரியது சிறியது என்று எதுவும் இல்லை.காரணம் அவை எல்லாமே மனிதற்கு துன்பத்தை தரக்கூடியதே..அதுவும் ஏழைக்கு அந்த நிலமை வரும்போது..இறைவன் அவர்களுக்கென்று துணையை கொடுக்கிறார்.. வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தருகிறார். நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுக்கிறார்..

2000ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு ஈரான் நாட்டிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட படைப்பிது.இறுதி நேரத்தில் ஆஸ்கரால் புறக்கணிக்கபட்டது கொடுமை.ஈரானிய சினிமாவை இன்னொரு தரத்துக்கு கொண்டு சென்ற இப்படைப்பை, ரசிகர்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய அனுபவம் ஆகும்.   
 .
என்றாவது ஒரு நாள் ஈரானிய சினிமாவை பற்றியும் அதனது வளர்ச்சியை பற்றியும் எழுத வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.அதுவரை உங்களை கவர்ந்த ஈரானிய திரைப்படங்கள் ஏதேனும் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.சற்று உதவியாக இருக்கும்.பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன்.




புதிதாக சினிமா டைரி, page ஒன்று உருவாக்கிருக்கிறேன் நண்பர்களே..பார்க்கும் படங்களின் சிறிய தொகுப்பாக இருக்கும் என நம்புகிறேன்..புதிதாக துப்பாக்கி போன்ற படங்கள் பற்றி எல்லாம் எழுதி இருக்கேன்..படிச்சிட்டு முடிந்தால் உங்களது கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி.

Monday 26 November 2012

என் குரல்..நாய் குரல்..லொல் லொல்..

இது ஐம்பதாவது பதிவுங்கோ.பிளாகிங் ஆரம்பிச்சு ஒரு வருடம் தாண்டிருச்சி..மலேசியாவுல இருக்கிற இந்த பையனுக்கு கூட தொடர்ந்து ஆதரவுகள் வழங்கி வரும் நண்பர்கள், அண்ணன்மார்கள் எல்லோருக்கும் என் மனம் கூறும் பல நன்றிகள்..எல்லோரும் சண்டை இடாம பிச்சுப்பிச்சு பகிர்ந்துக்கோங்கோ..
=====  ====== ====== ===== ======= ====== ===== ====== =======
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சீன குடும்பம்.கணவன் மனைவி அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் என நீண்ட காலமாக அமைதியாக வசித்து வருகின்றனர். பார்த்தால் புன்னகை, பேசினால் ஹெலோ..எங்களுக்குள் இருக்கும் பிஸியான சூழலில் இதுதான் உறவு.


அவர்கள் கடந்த சில மாதங்களாகவே நாய்களை வளர்த்து வருகிறார்கள் என்று சொல்வதை விட அடித்து வருகிறார்கள் என்று சொல்லலாம்.எத்துவதும், வார்ப்பட்டையில் அடிப்பதும் என இவர்களது மூடு சரியில்லை என்றால் நாய்தான் பலியாடு என்று நினைக்கிறேன்.சோறு வைக்கிறார்களோ இல்லையோ நாய்க்கு சோகத்தை மட்டும் அளிக்கிறார்கள்.

இவர்கள் அடிக்க அந்த நாய் கொடுக்கும் அலறல் இருக்கிறதே..கேட்கவே பாவமாக இருக்கும்.சில நேரங்களில் நான், என் அக்கா என கோபப்படுவோம்.இரக்கத்தில் ஏதாவது கத்தி விடலாம் என்று பார்த்தால் இருக்கிற உறவும் பகையாகிவிடுமோ என்று தோன்றுகிறது, இதற்கு இடையில் இன்னும் ஒரு குட்டி நாய்..புதிதாக..என்ன கதியாக போகிறதோ...என்ற நிலையில்..இப்பவே ஒரு செருப்பை கழுத்தில் தொங்கவிட்டுவிட்டார்கள்.


அது எப்ப கலண்டு விழுமோ என்ற நினைப்பில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருக்கிறது..குடும்பத்தலைவர்-தான் நாயை பெண்டு கலட்டுறாருனா அவரோட குடிடீஸும் சில நேரங்களில் இதையேதான் ஃபோல்லோ பண்றாய்ங்க..நல்ல ஃபேமிலி போங்க.

ஒரு நாயை மனிதன் அடிக்கையில், சிறிது தூரத்தில் நாய் குட்டியின் மன நிழலில் :

ஒருவேளை என் குரல் உனக்கு கேளின்.......
மனிதரே,
நாங்கள் உங்களுடன் பழக, உயர்ந்தோர் ஆக முயற்ச்சிக்கிறோம் - நீங்கள்
மனித தோல் உருவில் எங்களாக துணிகிறீர்கள்...

இறைவா,
உன் படைப்பை நிறுத்து,
இவர்கள் பார்வைகளை திருத்து
மனிதர் பாவங்களை போக்கு..

இனி,
உருவங்கள் வேறுப்பட்டாலும் பரவாயில்லை,
உணர்வுகளையாவது ஒருமைப்படுத்து,
எதிர்வரும் சமுதாயம் சமத்துவமாகட்டும்..

பரிதாபக்குரலில், நாய் குட்டி

========================================================================
மேலே இருப்பது ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதுன பதிவுங்க..ஆனால் நாய் நிலைமை மட்டும் முழுமையா மாறுல.உங்க கமெண்ட்ஸை வாரி வழங்குங்க..யாரையாவது எட்டி உதைக்குனமுனு தோனுனா கொஞ்சம் எச்சரிக்கை - முன்னால இருப்பது உங்க ஸ்கிரீன் என்பதை மறவாதிங்க.மீண்டும் அடுத்த பதிவோடு சந்திக்கலாம்.அதுவரை..

உங்கள் ஆதரோவோடு,

Monday 19 November 2012

சினிமா டைரி 1 : உறவும் ஜந்துக்களும்

Far From Home: The Adventures Of Yellow Dog (1995)
@ A Film By Phillip Borsos
@ Stars : Jesse Bradford , Mimi Rogers And Bruce Davison

ஒரு விடுமுறை அன்று, தூக்கம் வராமல் காலையில் தவித்த தருணத்தில் ஸ்டார் மூவிஸ் அலைவரிசை இந்த படத்தை அறிமுகபடுத்தியது.அதற்கு முன் படத்தை நான் அறிந்ததுக்கூட இல்லை..தலைப்பை பார்த்த போதே இது ஒரு அட்வெண்ட்ச்சர் படமாக இருக்கும் என்று எனக்குள்ளேயே யூகித்துக்கொண்டேன்.காலையிலேயே இந்த மாதிரி படங்கள் என்றாலே மனதுக்கு அமைதியை தரக்கூடியதாக இருக்கும் என்பது எனது கணிப்பு (ஆமா..இவரு பெரிய நோஸ்ட்ரடாமஸ்..) வீண்போகவில்லை..ஒரு அருமையான படமிது..

இத்திரைப்படத்தை பலரும் அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை.அவ்வளவு எளிமையாக காலை பொழுதை அழகுப்படுத்திய நல்ல படைப்பு.ஒரு நாய்க்கும் சிறுவனுக்கும் உள்ள நட்புதான் கதை..கதை நாயகனான அங்குஸ், தன் அப்பாவுடன் கடல் வழி பயணம் மேற்க்கொள்கிறான்..அவனோடு புதிதாக கிடைத்த நாய்..திடீரென்று சில கோளாருகளால் கப்பல் தடுமாற அங்குஸும் யெல்லோ என்ற நாயும் தனிப்பகுதியில் விடப்படுகின்றனர்.அது யாருமற்ற இடம்.அங்கு ஒருவருக்கொருவர் எப்படி உதவியாக இருந்தனர் ? அந்த நாய் அங்கூஸுக்கு எப்படி எல்லாம் துணையாக இருந்தது ? இறுதியில் இருவரும் மீட்கப்பட்டனரா என்பதே கதைச்சுருக்கம்.

பல ஹாலிவுட் படங்களில் பார்த்த கதைதான் எனினும் இந்த படம் ஏதோ மனதில் செய்கிறது..வெறும் ஒன்றரை மணி நேரமே ஓடும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் Jesse Bradford, Mimi Rogers and Bruce Davison ஆகியோர் நடித்திருக்கின்றனர்.ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கனடா நாட்டு இயக்குனரான Phillip Borsos (1953-1995) என்பவர் எடுத்த ஃபேமிலி படமிது.விமர்சக, ரசிகர்கள் மத்தியில் நடுத்தரமான வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.

அழகான ஒளிப்பதிவு, நடிப்பு என்று அனைத்துமே சிறப்பாக இருக்கும்.கண்டிப்பாக குடும்பத்துடன் சேர்ந்து அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.குழந்தைகளை நிச்சயம் கவரும்.
==============================================================================
இப்படி ஒரு தொடரை தொடங்க வேண்டும் என்பது எனது நீண்டக்கால ஆசை.நாம் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருப்போம். அதில் எண்ணிலடங்கா படங்கள் நமக்கு பிடித்திருக்கும்.அதில் ஒரு சிலதே விமர்சனமாக போடா முடிகிறது.. மீதமுள்ளவை சிறு தொகுப்புகளாக, ஒரு நினைவு மீட்டலே இத்தொடர்.
==============================================================================
Gremlins (1984) - United States
@ A Film By Joe Dante
@ Stars : Zach Galligan, Phoebe Cates and Hoyt Axton

பொதுவாகவே எனக்கு, இந்த காமெடி வகையில் ஹாரர் ரசனைகளை ஆங்காங்கே தெளிக்கவிட்டு வரும் படங்கள் என்றாலே அவ்வளவாக ஆகாது.ஹாரர் என்றாலே சீரியஸ்.. அதுல என்ன காமெடி என்று கேட்கும் பயப்புள்ள நான்.ஸ்டீவன் ஸ்பீர்பெர்க் என்னை கவர்ந்த இயக்குனர்.அவரது தயாரிப்பு என்ற ஒரே காரணமே இந்த கிரேம்லின்ஸ் படத்தை பார்க்க ஏதோ என் மனம் ஒத்துப்போச்சி.அதுவும் படத்தை நான் டவுன்லோடு போடவில்லை.. சினிமெஃக்ஸ் அலைவரிசையில் பார்த்தது,

1984-ஆம் ஆண்டு ஜோய் டாந்தே அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் Zach Galligan, Phoebe Cates, Hoyt Axton போன்றவர்கள் நடித்திருக்கின்றனர்.ராண்டல் என்ற பையனால் கொண்டுவரப்படும் வினோதமான மொக்வாய் என்னும் சின்ன அழகான உயிரினத்தின் வளர்ச்சியால் ஊரெங்கும் ஏற்படும் பிரச்சனைகளே படம்..

வழக்கம் போல ஸ்பீல்பெர்க் படம்.ஆதலால், சின்ன வயசு பிள்ளைகளே படம் முழுவதையும் ஆட்சி செய்கின்றனர்.கூடவே சிரிப்பு போலிஸ் போல இந்த மோக்வாய் ஜந்து செய்யும் லீலைகள் இருக்கிறதே, இதுவெல்லாம் ஹாரர் லிஸ்டுல சேர்த்த புண்ணியவான் யாருடா என இருந்தது.
சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், வழக்கமான ஹாலிவுட் அம்சங்களும் நிறைந்த பொழுது போக்கு படம் என்று சொல்லலாம்.வாய்ப்பு கிட்டினால், கண்டிப்பாக சிறுவர்கள் பெரியவர்கள் என்ற பேதமே இல்லாமல் கண்டு ரசிக்கலாம்.

உங்க ஆதரவோடு 

Tuesday 13 November 2012

தீபாவளிங்கோ..வாங்கோ..



கடந்த ஒரு வாரமாக கொஞ்சம் தீபாவளியால் பிஸி ஆகிவிட்டமையால் சரிவர பிளாகிங்கு வர முடியவில்லை நண்பர்களே...அதனால் பலருக்கும் நேரடியாக தீபாவளி வாழ்த்துக்களை சொல்ல பாக்கியம் கிட்டவில்லை..
இந்த பதிவின் மூலம்..

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு இந்த சின்ன கொசுப்பையனது தீபாவளி வாழ்த்துக்கள்..அனைவரும் எல்லா நலங்களும் பெற்று வாழ்ந்திட இறைவனை வேண்டுவோம்..எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அருள்வாராக..

இன்னும் இரண்டு நாட்களில் புதிய பதிவுடன் வருகிறேன்.அதுவரை வணக்கம் மற்றும் நன்றி நண்பர்களே.




ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் ஹரி ஓம் நமோ நாராயணாய


Monday 29 October 2012

அமீர்க்கானுக்கு நன்றிங்கோ...

அப்பாடா..எத்தனை மாதங்கள்..இவ்வளவு இடைவெளிக்கு பிறகு பிளாகிங் உலகுக்குள் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி."அடப்பாவி எங்கடா போயிட்ட?", "இருக்கியா இல்ல மேல போயிட்டியானு?" சில நண்பர்கள் மனதிலே கேள்விகள் எழுந்திருந்தாலும் சந்தேகமில்லை.அந்த காரணம் இந்த காரணமென்று என்று காட்டி சாக்கு சொல்லிட மனமில்லை நண்பர்களே..

எத்தனை பேர் என்னை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்றும் தெரியவில்லை...என்னதான் வேலை, வாழ்க்கைனு போனாலும் பிளாக் உலகை மிகவும் மிஸ் செய்துவிட்டதாக ஒரு தவிப்பு...கடந்த சில மாதங்களாக நான் அடைந்த பெரிய இழப்பு என்பதை உணர்ந்த நொடி இதை எழுதுகிறேன்.போன வாரமாகவே மறுப்படியும் பிளாக் பக்கம் வரலாம் என்ற ஆசை தோன்றிற்று.

நான் எழுதி எல்லாம் யார் படிக்க என்ற ஒரு தினுசான எண்ணம் தடை விதித்தே வந்தது..திரைப்படங்கள் பார்ப்பதும் குறைந்து விட்டது.குறிப்பாக நல்ல சினிமா காண்பதே அரிதென ஆகிவிட்டது.இந்த நிலையில் பார்த்த ஒரு ஹிந்தி சினிமாதான் எனது வலையுலக, எழுத்துலக மறு வரவுக்கு அடித்தளம்.படம் வெளிவந்தது 2007ல்..என்னை கவர்ந்த அமீர் கான் அவர்கள் நடித்து இயக்கிய அற்புதமான திரை உணர்வு.நீண்ட நாட்களாகவே பார்க்க எண்ணிய படம் திடீரென்று எதிர்ப்பாராமல் டிவியில் ஒளிப்பரப்பவே ஆர்வத்தோடு அமர்ந்தேன்...படம் Taare Zameen Par..

நண்பர்கள், வாசகர்கள் தயவு செய்து பயமுற வேண்டாம்..நான் விமர்சனம் எழுத போவதுமில்லை..மறுப்படியும் உங்களை படிக்கச்செய்து பாவத்தை வாங்கிக்கொள்ளவும் தயாராக இல்லை..ஹி..ஹி..(இதனை எப்படியாவது எடுத்துக்குங்க) 

படத்தை பற்றி நிறைய திரை ரசிகர்கள் கேள்விப்பட்டும் பார்த்தும் இருப்பார்கள்..ஒரு எட்டு வயது சிறுவனின் தனி உலகை, அவனது மனப்போராட்டங்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துக்காட்டியுள்ள திரைக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்.எப்படி மகாபாரதம் எழுதிய வியாசரே தன்னையும் ஒரு கதாபாத்திரமாக கதைக்குள் அமர்த்திக்கொண்டாரோ அதே வண்ணம் அமீர் கான்.

இவர் கதையில் ஓர் அங்கமே..ஆனால் வியாசர் இல்லையெனில் எப்படி பாரதம் உருவாகிருக்காதோ அதேப்போல் அமீர்க்கான் இங்கே..இவ்வளவு பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர் ஒரு சிறுவனை முதன்மைப்படுத்தி தயாரிக்க வேண்டிய கட்டாயமே கிடையாது.கதைக்கு முதலிடம் கொடுக்கும் கலைஞர்களே சிறந்த திரைப்படைப்பாளிகள்..அந்த வரிசையில் அமீர்க்கான் இந்திய சினிமாவில் நான் மதிக்கும் நடிகர்.

சில படங்களை பார்த்தவுடன் மறந்துவிடுவோம்..சில திரைப்படங்கள் எப்போதுமே நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கும்.அந்த வரிசையில் அமீர்க்கானின் 3 Idiots, Taare Zameen Par.இன்னும் பார்க்காதவர்கள் ஒரு முறையேனும் பார்க்க வேண்டியது அவசியமாகும்.இப்போதைக்கு என் மனதில் தாளம் போடும் சங்கர் மகாதேவன் அவர்கள் பாடிய பாடலை கேளுங்கள்..படத்தை உடனே டவுன்லோடு போட்டாலும் போடுவீர்கள்.பாருங்கள்..உணருங்கள்.மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.நன்றி.


Sunday 28 October 2012

A Walk To Remember : காதல் கனவாக..


காதலர்கள் இருவர், வழக்கமாக தெருவில் கைக் கோர்த்தப்படியே நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.. அவன் பேசி வர..அவள் முகம் ஏதோ சொல்கிறது..என்ன அது என தெரிவில்லை.ஆனால், அது ஏதோ பெரிய ஏமாற்றத்தை பிரதிப்பலிக்க போவதை கண்கள் நிரூபிக்கின்றன.

அதில் ஆண், "நீ என்ன உனது கல்லூரி படிப்பை எண்ணி வருத்தப்படுகிறாயா ?" என கேட்க, அவள் "இல்லை..நான் கல்லூரிக்கு எப்லிக்கேஷனே போடப்போவதில்லை" என பதிலளிக்கிறாள்.மௌனம் காக்காது உடனே அவள், "எனக்கு உடம்பு சரியில்லை" என்று கூறுகிறாள்.

சிந்திக்காத காதலன், "இருக்கட்டும் சரி, இப்போது உன்னை உனது வீட்டுக்கு..." என்று சொல்ல வந்ததில் குறுக்கிட்டவள் மீண்டும் "உடம்பு சரியில்லை..எனக்கு லியூக்கீமியா இருக்கிறது" என சட்டென சொல்லி முடிக்கிறாள்.முகம் மாற அவனும், சோகக்கடலான கண்களில் அவளும்...மனம் நிறைந்த சந்தேகத்துடன், குரலில் இல்லையென சொல்கிறான்."உனக்கு 18 வயதுதான் ஆகுகிறது..உனக்கு ஒன்றும் இல்லை, நீ ஆரோக்கியமாக இருக்கிறாய்" என்கிறான்.குரல் மங்கிய நிலையில்.

தனக்கு இந்த நோய் இருப்பது இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரியவந்ததாகவும்..சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டதாகவும் என்று, அத்தனை மரண ரகசியத்தையும் நான்கே வரிகளில் பேசி முடித்து ஓடுகிறாள்.

அவன் கலங்கி நிற்கிறான்..அவள் சொன்னதில் எது காதில் விழுந்ததோ இல்லையோ ?? அவள் தன்னை விட்டு போக போகிறாள் என்ற எண்ணமே அவனுக்கு இடியாகிறது.

வார்த்தைகளாக படிக்க மேலுள்ள சூழல் எப்படியோ.நான் அறியேன்ஆனால், படமாக பார்க்க தாக்கிவிட்டது.. அவ்வளவு மென்மையான காதல் சித்திரத்தில் சூறாவளியா என்ற எண்ணமே ஜாஸ்த்தியானது.இரவு தூங்கவும் லேட்டானது.அவ்வளவு எளிதாக மறக்கக்கூடிய படமல்ல இது என்பதை என் சின்னப்பிள்ளை மனம் பிறகே உணர்ந்துக்கொண்டது.

 1999 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஸ்பார்க் அவர்கள் எழுதிய நாவலின் தழுவலில், அவனாக ஷான் வெஸ்ட் மற்றும் அவளாக மேண்டி மூர் முறையே லேண்டன் மற்றும் ஜெம்மி சுலிவன் என்ற கதாபாத்திரங்களில் வாழ, 2002ல் வெளிவந்த மெல்லிய சோகங்கள் பேசும் காதல் படைப்புதான் எ வாக் டூ ரிமேம்பெர்.அடாம் ஷாங்க்மான் இயக்க, கரேன் ஜன்ஸென் திரைக்கதையை புனைந்துள்ளார்.

தந்தையை பிரிந்து தன் தாயோடு வாழ்ந்து வரும் லேண்டனுக்கும் பாதிரியாரின் மகளான ஜெம்மி சுலிவனுக்கும் இடையில் நிகழும் சந்திப்புகளையும் பள்ளி காதலையும் பேசும் அழகோவியம்.இது போலான ஒரு அழகிய காதலை, கவியாக படத்தில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது.லேண்டன் மற்றும் ஜெம்மி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகளை எப்படி வர்ணிப்பது ? பார்த்து அனுபவிக்க வேண்டியதில் ஒன்று அது.

அவன் அவள் அருகில் செல்ல - அவள்
கண்ணம் சிவக்கும்...கவிப்பாடும்..
முத்தம் என்ற மௌன மொழியில்

ஜெம்மியாக மேண்டி மூர் : அழகிய தோற்றமும் கள்ளம் கபடமற்ற முகத்தோடும் படம் முழுக்க அவரிடத்தில் விழவைக்கிறார்..கூடவே அழுகையும் தருகிறார்.இனிமையான நடிப்பை பார்த்துள்ளேன்.இனிப்பை தரும் நடிப்பை முதல் முறையாக இவரால் அறிந்துக்கொண்டேன்.

லேண்டனாக ஷான் வெஸ்ட் : இவரது நடிப்பில் இதற்கு முன்னம் எந்த படமும் பார்த்ததில்லை.இனிமேல் பார்த்தாலும் மனம் முழுவது லேண்டானகவே தெரிவார் என்பது மட்டும் உறுதி.சிரிக்கிறதுக்கு விலை பேசும் இறுக்கமான முகத்தோடு காதல் வயப்படுவதும், தன் வாழ்க்கையையே மாற்றிய காதலி இறக்கப்போகிறாள் என்றதும் பகையாளியாக மதித்த தனது தந்தையை அனுகும் போதும் அருமையான நடிப்பின் வெளிப்பாடு.அதுவும் மேலே சொன்ன சூழலில் அவர்கள் இருவரது நடிப்பை பார்க்கனுமே அவ்வளவு இயல்பு.
சில திரைப்படங்களை அவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட முடிவதில்லை.அது போன்றவைகள் எத்தனை முறைகள் பார்த்தாலும் திகட்டாது. மென்மேலும், புது நினைவுள், கருத்துக்களை அது பதிவு செய்ய வேண்டும்.அதுவே என்னைப் பொருத்தவரையில் சிறந்த படைப்பாகும்.அது அத்தனையும் கொண்ட எ வாக் டூ ரிமேம்பரை இதுவரை ஐந்து முறை கண்டு விட்டேன்.மேலும், ரசிப்பேன் என்பது மட்டும் உறுதி.

என்னையும் காதலிக்க சொன்ன திரைப்படம் இது.காதலில் விழுவேனா என்பது சந்தேகம்தான்.. காரணம், காதல் என்னை காதலிக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.எதிர்ப்பார்ப்பும் முற்றிலும் இல்லை, 
வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் நம்மை விட்டு கடந்துப்போன உறவுகளை ரொம்பவும் எளிதாக மீட்டிப்பார்க்க உதவும் தருணங்களாக  ..உங்கள் மனதிலும் நடமாடக்கூடும்.

ஓர் அழகான படைப்பை தேடுபவர்கள், தங்களது பழைய காதலை அசைப்போட துடிப்பவர்கள், காதலிப்பவர்கள் இனிமையான காதலை திரையாக பார்க்க ஆவலோடு இருப்பவர்கள் கட்டாயம் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.உண்மையான உள்ளத்து அன்பையே மையப்படுத்தி சொன்ன காதல் சித்திரம்.

Related Posts Plugin for WordPress, Blogger...