Friday 23 December 2016

The Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..

 உலக ஹாரர் சினிமா வரிசையில்  ஹாரர் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ரோஜர் கார்மென் அவர்களின் இயக்கத்தில் வின்சென்ட் பிராய்ஸ் அவர்களின் நடிப்பில் 1963-ஆம் ஆண்டு வெளிவந்த The Haunted Palace என்ற  திரைப்படத்தைக் காண நேரம் கிடைத்தது.

நேரம் வீணாக போகவில்லை என்று சொல்லும் அளவிற்க்கு ஓரளவு சற்று பயத்தையும் சற்று வியப்பையும் கூடவே நல்லப்படம் என்ற உணர்வினையும் சேர்த்து வழங்கியது.60 - ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ரசிகர்களை கவர்ந்த திகில் திரைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் The haunted Palace - 1963 பார்ப்பவர்களின் மனதினைக் கண்டிப்பாக கவரும் என்பதில் சந்தேகம் இல்லை
   
கதைச்சுருக்கம் :
Arkham என்ற ஊரில் 1765-ஆண்டு ஓர் அழகான இடி மின்னல் கூடிய இரவில் திரைப்படம் தொடங்குகிறது.தொடர்ந்து வினோதமான சம்பவங்கள் ஊரெங்கும் நிகழ,ஊர் மக்கள் பலரும் அரண்மனையில் வசிக்கும் Joseph Curwen என்ற மந்திரவாதிதான் இதற்கு காரணம் என்று முடிவு கட்டி அவருக்கு ஒரு முடிவுவும் கட்டிவிடுகின்றனர்....சாரி..ஐ மீன்...அவரை உயிரோடு எரித்து கொன்றுவிடுகின்றன்ர்.இறக்கும் பொழுது தன்னுடைய மரணத்துக்கு காரணமான ஐந்து பேரையும் மற்றும் இந்த ஊரையும் கண்டிப்பாக தாம் மீண்டும் வந்து பழிவாங்குவதாக கூறி சாபத்தை இட்டுவிட்டு இறந்திட திரைப்படம் அப்படியே 110 வருடங்களுக்கு பிறகு அதாவது 1875 - ஆண்டுக்கு தாவுகிறது.இப்பொழுது அதே Arkham என்ற ஊருக்கு அச்சு அசலாக இறந்துப்போன மந்திரவாதியின் ஒருமித்த உடலமைப்புடன் Charles Dexter Ward என்பவர் தன் மனைவியான Ann Ward உடன் ஊர் அரண்மனையில் தங்கவிருப்பதாக கூறிக்கொண்டு வந்து இறங்குகிறார்.

இதைக்கண்டு ஊர் மக்கள் பலரும் ஆச்சரியத்திலும் பயத்திலும் நடுங்க வேண்டியது வர, வார்ட்டை இந்த ஊரைவிட்டு போய்விடுமாறு எச்சரிக்கவும் செய்கின்றனர்.இதைக் கவனத்தில் கொள்ளாமல் தன் தாத்தாவான Joseph Curwen - யின் அரண்மனையிலேயே தன் மனைவியுடன் வசிக்க, மறுபடியும் ஊரெங்கும் சில வினோதமான சம்பவங்கள் நிகழ்கின்றன.இதற்கெல்லாம் காரணம் என்ன? உண்மையாக வார்ட் என்பவர் யார் ? எதற்காக வந்துள்ளார் ? மற்றும் ஊர் மக்கள் இவரை சமாளித்தார்களா ?அல்லது சாபத்திற்கு ஆளானார்களால் என்பதனை.....டிவிடி கிடைப்பது கஷ்டம்தான்.. இல்லனா பரவால பதிவிறக்கம் ஆவது செய்து பாருங்கள்.திரைப்படம் உங்களை கவர்ந்திட வாய்ப்புகள் உண்டு. 
( அப்பா...ஏதோ ஒரு வழியா கதைய சொல்லியாச்சு..)        

The Haunted Palace - 1963 படத்தை பற்றிய சில சுவாரஸ்யங்கள்:

இத்திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதி காட்சிவரை நம்மை கவரும் கலைஞர்களின் மிகவும் முக்கியமான ஒருவர் படத்தின் கதாநாயாகராக வலம் வரும் Vincent Price தான். Charles Dexter Ward மற்றும் Joseph Curwen என்ற இரண்டு கதாபாத்திரத்தில், மிகுந்த ஆழமான முகபாவனைகளோடும் சிறந்த நடிப்போடும் திரைப்படம் முழுவதையும் தன்னுடைய தோள்களிலேயே கொண்டு சென்றுள்ளார்.அவரது முகம் பாவனைகளும் மற்றும் குரல், வசன உச்சரிப்புகளும் பார்ப்பவர்களின் மனதை விட்டு நீங்காமல் இருப்பது உறுதி.

சில காட்சிகளில் தமிழ் திரையுலகில் யாரோ ஒரு நடிகரை ஞாபகமும் செய்கிறார்.அமெரிக்க சினிமாவில் பெரியளவில் குறைத்து மதிப்பிட்ட சிறந்த அபாரமான நடிகர்களில் ஒருவராக இன்றும் ஹாலிவுட்டில் மதிக்கப்படுகிறார்.இவரைப் போன்ற சில நடிகர்களை பார்க்கும் பொழுது விருதுகளின் மீதும் அதை வழங்குபவர்கள் மீதும் மேல் ஆத்திரம் வருகிறது...நல்ல திறமைசாளிகளை என்றுதான் சினிமா உலகம் அரவைணைக்க போகிறதோ தெரியவில்லை..
        
மேலும்,திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிகர்கள் எனில் Lon Chaney Jr. மற்றும் Leo Gordon ஆகியோரை சொல்லலாம்.இவ்விருவரும் திரைப்படத்தில் முறையே Simon Orne மற்றும் Ezra Weeden என்ற கதாபாத்திரத்தில் வலம் வந்திருப்பார்கள்.நன்றாகவும் நடித்திருக்கின்றார்கள்.தொடர்ந்து 50 ஆம் மற்றும் 60 ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களைப் பார்த்துவருபவர்கள் இவர்களின் பெயர்களை அறிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

இத்திரைப்படத்தின் நடித்த நடிகர்களுக்கு அடுத்து நம்மை அதிகமாக கவருவது திரைப்படத்தின் பின்னனி இசையும் ஒளிபதிவுமே.Opening Credits ஆரம்பித்தவுடனே பின்னனி இசை சும்மா பின்னி எடுக்கிறது.மேலும்,ஒளிப்பதிவும் Background Sets களும் நம்மை கண்டிப்பாக கவருவது நிச்சயம்.பிரபல அமெரிக்க எழுத்தாளரான H. P. Lovecraft அவர்களின் கைவண்ணத்தில் 1927 - ஆம் ஆண்டு உருவான The Case of Charles Dexter Ward என்ற குறும் நாவலின் தழுவலான இத்திரைப்படம் இன்றளவும் ரசிகர்கள் விமர்சகர்கள் என்று பலரிடையே நல்ல வரவேற்பு பெற்று  வருவது குறிப்பிடதக்கதாகும்.

IMDB : 6.6 / 10
MY RATING : 6.2 / 10

===================================================================================================
குறிப்பு : வலைப்பூ தொடங்கிய புதிதில் எழுதிய பதிவின் மறு ஆக்கமாகும் *மீள்பதிவு*
பதிவுக்காக சில தகவல்களை வாசகர்களுக்கு திரட்டி கொடுக்க உதவிய கூகுளுக்கு நன்றிகள்.
====================================================================================================

 ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

Tuesday 8 November 2016

Tell Me How I Die (2016)

தி ஷைனிங் படத்தில் Maze ஒன்று வரும்.யாராவது உள்ளே நுழைந்தால் எப்படி வெளியே வருவதென்று என்று தெரியாமல் கொஞ்ச நேரம் திக்குமுக்காட வைக்கும்படி அமைத்திருப்பார் குப்ரிக்.கிளைமக்ஸ் காட்சி அந்த Maze-ல்தான் நடக்கும்.


அதே Maze மாதிரி ஒரு இடத்தில் ஒரு சீரியல் கொலைக்காரனோடு நீங்கள் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும்?அதுவும் எப்படி சாகப்போகிறோம் என்ற Previson-னோடு உள்ளேயே அடைப்பட்டு உயிருக்கு போராட நேர்ந்தால் நமது உணர்வு எப்படி இருக்கும்?
அதை பார்க்க வேண்டுமானால் டிஜே வியோல இயக்கத்தில் வந்த டெல் மீ ஹௌ ஐ டை படம் பாருங்க.

Maze-க்கு பதிலாக இங்கு மருத்துவ ஆராய்ச்சி கூடம்.ஆனால் அதே விண்டெர்.
புதிதாக கண்டுபிடித்த மருந்தை சோதிக்க சில கல்லூரி மாணவர்களுக்கு சம்பளம் கொடுத்து பரிசோதனைக்காக அழைத்து வருகிறது ஹாளரொன் நிறுவனம்.ஆராய்ச்சி கூடத்தை விட்டு வெளியேறவும், உள்ளே நடக்கும் விஷயங்கள் வெளியே சொல்லக்கூடாது என்றும் பல கட்டளைகள் விடுத்து கைத்தொலைப்பேசி உட்பட வாங்கிக்கொள்கிறார்கள்.அதே வேளை தங்குபவர்களுக்கென்று அனைத்து சௌகரியங்களும் செய்துக் கொடுக்கபடுகிறது.பரிசோதனை தொடங்க, சில டிரக்-மருந்து ஊசிகள் இவர்களுக்கு ஏத்தப்படுகிறது.புதிய சூழலை சந்தோஷமாக கடக்கும் மாணவர்களுக்கு அடுத்து சில அதிர்ச்சிகள் ஆரம்பிக்கிறது.
அந்த குழுவில் இரு மாணவர்க்கு எதிர்க்காலத்தில் நடக்க போகும் சில காட்சிகள் வந்து போகின்றது.இது கனவா?நிஜமா என்ற கேள்விக்கு நடுவே டாக்டரும் இது பெருசா இல்லையென்று மழுப்புகிறார்.

ஹீரோயினான அன்னா-வின் PreVision உச்சமையடைய, சில நண்பர்கள் சேர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்க போய், ஒரு சீரியல் கொலைகாரனிடம் மாட்டிக்கொள்கிறார்கள்..ஒவ்வொருவராக கொலை செய்யப்பட, கொலைகாரன் யார்?அந்த ஆராய்ச்சி கூடத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் யாவை போன்ற கேள்விகளுக்கு படம் பதில் சொல்லும்.

சீரியல் கொலை படங்கள் ஹாரர் உலகுக்கு புதிதில்லை.ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் சிக்கிக்கொள்வதும் அவர்களை "ஏதோ" வேட்டையாடுவது போலான கதைகள் எல்லாம் அகாதா கிரிஸ்டி காலம் தொட்டே எடுக்கப்பட்டு ஹாலிவுட்டில் நிரம்பி கிடக்கிறது.இன்னமும் இது போன்ற படங்களை எடுக்கும் அதைவிட ரசிக்கும் கூட்டம் இருப்பதுதான் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.
  
காடு, வீடு, ரோடு என்று எப்படி-எங்கெல்லாம் எடுக்க முடியுமோ அப்படியெல்லாம் உருவாக்கி விட்டார்கள். சிறிது வித்தியாசத்துக்கு இதில் ஆராய்ச்சி மையம்-கொடுக்கபடும் டிரக்ஸ்.படம் பார்த்த டைம், வேஸ்ட் ஆகவில்லை என்ற உணர்வை கிளைமக்ஸ் டிவிஸ்டு தரலாம்.படம் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகு டிரில் கிளம்பிவிடும்.
  

வழக்கமாக சின்ன பட்ஜெட்டில் பி லிஸ்ட் நடிகர்கள்-கலைஞர்கள் உருவாக்கும் படங்கள் அமெரிக்காவை தாண்டி வெளிநாடுகளில் பெரிய வெற்றியெல்லாம் பெறுவதில்லை.அதனால்தான் என்னவோ இது போன்ற படங்களை பார்க்க தவறி விடுகிறோம்.இவை பெரும்பாலும் Average ஆகவே இருக்கும் என்பது சின்ன ஆறுதல்.நம்ம தமிழ் சினிமாவின் "ஏ" தர டிரிலர்கள் பல நேரம் இவர்களது "பி" லிஸ்ட் டிரிலர் தரத்தில் இருப்பதாகதான் தோன்றுகிறது.

என் அண்ணன் படத்த பார்த்துட்டு காப்பி ஒன்னு தந்தாரு.அந்த மாதிரி யாராவது உங்ககிட்ட கொடுத்தா இல்ல 5 படம் ஒரு டிவிடினு கலெக்ஸன்ல கிடைச்சா பாருங்க.மேல கதை படிச்சு புடிச்சாலும் பாத்துருங்க.

அப்புறம் யாராச்சும் மருந்து டெஸ்ட் பண்றேன்-காசு கொடுக்குறேன் வறீயா என்று கேட்டா...உஷார்.   

Saturday 22 October 2016

Arnold Schwarzenegger பார்வை 2

டாப்-டென் என்று சொல்லிட்டோமே என்று நினைத்து ஆர்னல்ட் நடித்த திரைப்படங்களை திரும்பவும் பார்க்காமல்..கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு RECALL செய்து பார்த்துவிட்டு எழுத ஆரம்பிக்கும் பதிவு..

ஆர்னல்டு படங்களை மீண்டும் பார்ப்பதும் நினைவில் மீட்டெடுப்பதும் சுகமாகவே இருக்கிறது..கொஞ்சம் பார்க்கலாம் வாங்க..

PREDATOR (1987)

ஓர் அடர்ந்த காடு--ஏழு கமாண்டோக்கள்--ஒரு ஏலியன்..இதுதான் ஒற்றை வரி அல்லது சூழ்நிலை என்று வைத்துக்கொள்வோம்.

உலகத்தில் உள்ள எல்லா இயக்குனர்களாலும் படமாக்கக்கூடிய சிம்பிள் கதை.ஒரு ஏலியன்..அதை சுற்றி மனிதர்கள் என்று கால காலமாக புளித்துப்போன கதையை இந்தா தோசை தரேன்..இட்லி தாரேன் என்று சொல்லி ஏமாற்றிய கதைகள் எல்லாம் ஹாலிவுட் மட்டுமல்ல உலகமெங்கும் நிகழ்ந்துள்ளது..இதே கதையை-படத்தை எடுக்கிறேன் அதாவது (சுடுகிறேன்) என்று சொல்லி தமிழில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் ரசிகர்களை கொலை செய்த சம்பவம் கூட நடந்திருக்கிறது.

கூ.த: நான் அதிகமாக பார்த்து ரசித்த படத்தை தமிழில் ரீமேக் என்ற பெயரில் பார்க்கப்போய் வெந்துப்போன கதை தனிக்கதை.அந்த படத்தின் பெயரை நீங்களே யூகித்துக் கொள்(ல்)ளு(லு)ங்கள்.  

ஏலியன் மீது அன்பும் பரிவும் ஏற்படுத்தியது ஈ.டி படமென்றால் அதற்கு நேர்மாறாக சிறிய வயதில் பயமுறுத்திய படம் ஒன்று உண்டு..அதுதான் பிரடேட்டர்..இந்த படம் பார்த்துவிட்டு தூங்க பயந்த, குளிக்கும் போது பயந்த காலம் எல்லாம் உண்டு..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்...   

வெறும் 18 கோடி செலவில், ஜான் மெக்தியர்னன் இயக்கத்தில் 1987-ஆம் ஆண்டு வெளிவந்து அமெரிக்காவின் எல்லா மூலைகளிலும் 100 கோடி வரை வசூல் புரிந்து அமோக வரவேற்ப்பை பெற்றது.

ஒரு RESCUE மிஷன்-க்காக காட்டுக்குள் செல்லும் ஏழு கமாண்டோக்கள்..பூமிக்கு வந்து மனித வேட்டை ஆடும் ஏலியனிடன் சிக்கித்தவிக்கும் சாதாரண கதையை அற்புதமான திரைக்கதையால் நகர்த்திருப்பர்.

ஹெலிகப்டரில் ஒவ்வொருவராக இறங்க, சிகார் பிடித்தப்படியே அறிமுகமாகும் ஆர்னல்டின் "டட்ச்" என்ற கதாபாத்திரம் படம் முழுவதும்  வெளிப்படுத்தும் முக பாவனைகள் தனி ஸ்டைல்...அதுவும் படத்தின் கடைசி அரை மணி நேரங்களை தன் தோள்களில் சுமந்து சென்றிருப்பார்.தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோயிசத்தை காண்பது அரிது..

படம் பார்க்காத ஒருவர் இப்பொழுது பார்த்தாலும் ஏதோ புது படம் மாதிரி FRESH ஆக இருப்பதை உணரலாம்.நீங்கள் ஆர்னல்ட் ரசிகரோ இல்லையோ ஆக்சன் ரசிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.ஹாரர் பிரியர்கள் மிஸ் பண்ணாதிங்க.இதன் தொடர்ச்சியாக சில பாகங்கள் வந்தாலும் ஒரிஜினல் படத்தின் மகத்தான வெற்றியை பெற முடியாமல் போனதுதான் இந்த படத்தின் சிறப்பு.

ERASER (1996)

தமிழில் வந்திருக்குற விஜய்காந்த், அர்ஜூன் படம் மாதிரி ஏதாவது ஆர்னல்டு பண்ணிருக்காரா?? என்று கேட்டால் கூட இல்லை நினைச்சா கூட கட்டாயமா பார்க்க வேண்டிய படம் இரேசர்..நம்ம தமிழ் ஹீரோக்கள் நாட்டுக்கு அப்புறம் அதிகமா காப்பத்துன விஷயம் இருக்குனா அது கண்டிப்பா ஹீரோயினா-தான் இருக்கும்..அந்த மாதிரி ஹீரோ, ஹீரோயினை காப்பாற்றும் கதையிது..

உலகமெங்கும் குற்றவாளி மற்றும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு எதிராக சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்புகாக இருக்கும் ஒரு போலிஸ் பிரிவுக்கு Witness Protection System என்று பெயர்.இவர்கள் வேலையே சாட்சி சொன்னவர்களின் சொந்த அடையாளத்தை சிறிது காலம் அழித்துவிட்டு புது அடையாளத்தோடு பாதுகாப்பு வழங்குவதுதான்..இப்போது கண்டிப்பாக ERASER என்ற டைட்டிலுக்கான காரணம் புரிந்திருக்கும்..அந்த பிரிவின் முக்கிய போலிஸாக நம்ம ஆர்னல்டு..ஜான் கிரூகர் என்ற கேரக்டரில்..  

அமெரிக்க அரசாங்கத்துக்கு ஆயுதங்கள் செய்து கொடுக்கும் கம்பெனியான "சைரஸ்"..அதிநவீன ரக ஆயுதங்களை வெளிநாட்டு சதி கும்பலுக்கு விற்பதாக போலிஸ் சந்தேகப்பட, கம்பெனிக்குள் பணிப்புரியும் லீ குல்லென் என்கிற பெண்னை வேவு பார்க்க அனுப்புகிறது..அதன் தொடர்பாக சில உண்மைகள் வெளிவர, போலிஸுக்குள் இருக்கும் முக்கிய நபர்களே லீ-யை கொலை செய்ய முயற்சிக்க..கடைசிவரை எப்படி போராடி நம்ம ஆர்னால்ட் ஹீரோயினை காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை..

முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை சுவாரஸ்யம் குறையாமல் 2 மணி நேரம் போவதே தெரியாமல் பார்க்கலாம்.ஆக்சன் காட்சிகளில் ஆர்னல்டின் வேகமும் படத்தின் பாதியில் வரும் விமான சண்டையும் ஹைலைட்..James Caan, Vanessa Williams போன்றவர்களின் நடிப்பில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல கலெக்சனை தந்த படமிது.அதுவும் Pastorelli கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை கவர்கிறார். ஆர்னல்டின் சிறந்த ஆக்சன் லிஸ்ட்டில் கட்டாயமாக இரேசர்-க்கு இடமுண்டு.  

COMMANDO (1985)

ஆர்னால்டை ஒரு முழுமையான ஆக்சன் ஹீரோ அந்தஸ்த்துக்கு உயர்த்திய வெற்றி படம் கமாண்டோ..படத்தின் முதல் காட்சியிலேயே வில்லன் கும்பல், குப்பை லாரியில் வந்து ஒருத்தரை போட்டுத் தள்ளுகிறார்கள்..வரிசையாக மேலும் இருவர்..யாருய்யா இவனுங்க என்று நினைப்பதற்குள், அடுத்த காட்சி..ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான சிறந்த அறிமுக காட்சி..

பெரிய மரக்கட்டையை தோல்களில் தூக்கிக்கொண்டு வரும் பலமிக்க கைகளை சூம் பண்ணியவாரு தொடங்கும் டைட்டில் கார்டு படத்தின் மீதான ஒட்டு மொத்த மூடை கிளப்பிவிட்டிடும்..நம்ம ஆர்னல்டு முன்னால் DELTA FORCE பிரிவை சேந்தவர்.. அதாவது தீவிரவாதத்துக்கு எதிராக இயங்கும் ஒரு பிரிவு..இவர்களது பணியே தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட HOSTAGE-களை காப்பாற்றுவதுதான்.

இப்போது அந்த வேலையிலிருந்து ஓய்வு பெற்று தன் மகளுடன் வசித்து வரும் ஆர்னால்டின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மேலும் அவருடன் ஒரே யூனிட்டில் பணியாற்றிய மூன்று பேரும் கொல்லப்படடதாகவும் மேல்- அதிகாரி எச்சரித்துவிட்டு போகிறார்..இவர் இப்படி போக, கெட்டவர்கள் அப்படி வரவே பெரும் போராட்டத்தில் ஆர்னல்ட் மற்றும் மகளை கடத்திக்கொண்டு செல்கிறார்கள்.Val Verde (Fictional Country)  ஜனாதிபதியை கொலை செய்ய ஆர்னால்டை மிரட்டுகிறது. மகளை காப்பாற்ற வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்க..மிச்ச மீதி கதையை நான் சொல்ல வேண்டியதில்லை.ஆர்னல்ட் தன் மகளை காப்பாற்ற போராடும் காட்சிகளை மிரட்டலான ஆக்சன் மூலம் உருவாக்கிருப்பார்கள்.பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்.

ரேம்போ, டை ஹார் வரிசையில் காமாண்டோ ஹாலிவுட் வரலாற்றில் மிக சிறந்த ஆக்சன் படங்களில் ஒன்றாக சொல்கிறார்கள்.EXORCIST படத்தின் பாதிப்பில் 100 ஹாரர் படங்களாவது எப்படி வந்திருக்குமோ அதே மாதிரி காமாண்டோ.பக்கா சண்டை படத்துக்கு உதாரணம்.இந்த படத்தின் பாதிப்பு நிறைய இந்திய சினிமாவிலும் பார்க்கலாம். கேட்டால் இன்ஸ்பிரஷன் என்று சொல்வார்கள்.சரி இந்த பிரச்சனை வேண்டாம்..

ஆர்னல்ட் நடிப்பில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மூன்று படங்களை இன்று பார்த்தோம்..இன்னும் சில படங்களை எழுதலாம் என்ற நினைப்பில் அடுத்த பார்வையில் சந்திக்கலாம்...

Monday 17 October 2016

Oscar Kanavu..

இந்திய திரைத்துறைக்கு ஒரு அமீர்கான் போதுமா..முடிந்தால் நூறு..
திரை வாழ்வில் குறைந்தது ஒரு தடவை என்கிற வீதம் சற்றே இந்திய சினிமாவின் 100 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 100 முறைகளாவது...ஆஸ்கரு-க்கோ-கோல்டன் குளோப்பு-க்கோ சும்மா நாமினேஷன்ஸ் ஆவது கிடைத்திருக்கும்..
மூன்றாம் உலக நாடுகள் எல்லாம் உலக விருதுகளை அள்ளும்போது, இந்திய மொழிகள் பேசும் படங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏனோ ஏக்கத்தை தருகிறது..சினிமாவுக்கு பின்னால் இருக்கும் அரசியல் ஒரு புறம் இருக்கட்டும்..மதம் சார்ந்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நடுவே மனம்சார்ந்த படங்கள் குறைந்துவிட்டது..எதார்த்தத்தை விட்டு நாம் எங்கோ விலகி வந்துவிட்டோம் போலும்..பல இயல்பான கதைகளை திரையில் சொல்வதற்கு பதிலாக மசாலாக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.

நானும் படம் எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு இந்திய மசாலாக்களை உறிஞ்செடுத்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் கொடூரமான விஷயம் இங்கு மலேசிய தமிழ் சினிமாவிலும் நடந்துக்கொண்டிருக்கிறது..நாடக்கதனம் கலக்காத எதார்த்த காட்சி ஒன்றைக்கூட முழுமையாக கண்டதாக ஞாபகம் இல்லை..எதற்காக இவர்கள் இந்திய படங்களை, முக்கியமாக தமிழ் சினிமாவை நோக்கி பயணிக்கிறார்கள் என்றும் தெரிந்தப்பாடில்லை..

ஆனால் சீன, மலாய் இனத்தவர்களால் எடுக்கபடும்  மலேசிய மற்றும் சிங்கப்பூர் திரைப்படங்கள் ஒரு சில கேன்ஸ் வரை போகிறது..உலக விருதுகளை நோக்கி பயணிக்கிறது..ஒரே நாடு-ஒரே சினிமா..இந்த பிரிவினைக்கு காரணம்??

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களாக-தொழில் நுட்ப கலைஞர்களாக அறியப்படும் பலர் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள்..உலக சினிமாவின் அறிவு, அனுபவங்களை கொண்டவர்கள்..முதல் சில படங்களின் மூலம் "ஆஹா என்ன டைரக்டருல" என்று சொல்லுமளவுக்கு இருப்பவர்களில் பலருக்கு 3, 4 படங்களுக்கு பிறகு கதைக்கு பஞ்சம் வந்துவிட்டதோ என்ற நிலை வேறு..

தமிழ் சினிமாவை இரண்டு வகையாக பிரிக்கலாம்.ஒன்று, மசாலா..இரண்டாவது. புது முயற்சி அல்லது வித்தியாசம்..இதில், சொந்தமாக அதுவும் வித்தியாசமாக எடுக்கிறேன் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை வேறு..ஏதாவது பிற திரைச்சார்ந்த கதை அல்லது காட்சிகளின் காப்பியாக அல்லது தொகுப்பாக இருக்குமோ என்ற பயம் கொஞ்சம் எட்டி பார்க்கிறது.. 
வித்தியாசம் என்றால் காப்பி..இல்லையேல் அதே அரைத்த மசாலா..இவர்களது 
இயலாமையை வெளிச்சொல்லாமல் இதுதான் சினிமா..இதுதான் ரசனை என்று சொல்லி சாமனியனிடம் கொண்டு சேர்க்கும் வித்தைக்கு பெயர் வியாபாரம்..நல்ல உயர்த்தர ரசிகர்களை உருவாக்கும் கடமை படைப்பாளிகளுக்கே உள்ளது என்றால் மறுக்க முடியுமா..

முழுப்படத்தை சுட்டுவிட்டு புது பெயரில் ரிலீஸ் செய்து இன்ஸ்பிரசன் என்று, பேருக்கு கூட கிரடிட் கார்டுகளில் அந்த குறிப்பிட்ட படத்தையோ கலைஞர்களின் பெயரையோ போடாத கொடுமை இங்கு நடக்கிறது..இது இங்கு மட்டுமா நடக்கிறது..? என்று கேட்கலாம்..எல்லா நாடுகளிலும் இருக்கிறது...அட் லீஸ்ட் நாம் மாறலாமே..ஒருத்தர் செய்கிறார் என்பதற்காக அதே தவறுகளை நாமும் செய்யலாம் என்பது ஞாயமாகுமா?

அது போகட்டும்..அப்படியே அந்த காப்பியை மக்களில் சிலர் கண்டுபிடித்து சொன்னால்..உடனே சிலாகித்து "அந்த நாட்டு மக்களுக்கு அந்த சினிமா மூலம் கிடைத்த உணர்வை அனுபவத்தை நான் என் நாட்டு மக்களுக்கு தருகிறேன்" என்று கூறுவார்கள்..அப்படி அது எங்களுக்கு கிடைத்துதான் ஆக வேண்டுமென்றால் ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கு சப்டைட்டில் போதுமே..அது இல்லாதவர்களுக்கு உங்கள் பணத்தில் தமிழில் டப் செது கொடுங்கள்.அது போதுமே.முழுப்படமாக எடுக்கும் பட்ஜெட்டை விட இதற்கு செய்யும் செலவு குறைவுதானே.அடுத்தவர் படைப்பை அனுமதி இல்லாமல் சுடும் பழக்கத்துக்கு வழக்கமாக சொல்லும் அதே நொண்டி சாக்குகள்..    

இன்ஸ்பிரேஷன் அல்லது தாக்கமில்லாமல் புது படைப்பை உருவாக்க முடியுமா..என்று சிலர் கேட்கலாம்..ஒத்துக்கொள்கிறேன்..எந்த படைப்பும் ஒரு படைப்பின் தாக்கமோ பாதிப்போ இல்லாமல் இருக்காது..ஒன்றின் உருவாக்கத்திற்கு இன்னொன்றின் "மூலம்"-தான் காரணமாக உதவியாக இருக்கும்..ஆனால், இங்கு நடப்பது!! கிரியேட்டராக இல்லாமல் போகட்டும் விடுங்கள்..அட் லீஸ், இன்னோவேட்டராக கூட இருக்க மாட்டேன் என்று சொல்லும் திரைக்கலைஞர்களை என்ன செய்வது..  

"சாமன்யனுக்கு நான் படமெடுக்கிறேன்..அவன் 2 மணி நேரம் விசில் அடித்து எஞ்சோய் பண்ண வேணாமா..புது முயற்சி என்ற பேருல நான் ஏன் அவங்களுக்கு புரியாம எடுக்கனும்..கொடுக்குற காசுக்கு 6 பாட்டு 4 சண்டனு இருந்தாதானே சூப்பரா இருக்குமுனு" பல காலமாக இப்படியே சொல்லி மக்களின் மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கும் கலைஞர்கள் நெறைய பேர் இருக்கிறார்கள்...நான் பாமர மக்களுக்கு படம் எடுக்கிறேன் என்று சொல்லுவார்கள்...ஈரானில் கட்டட தொழிலாளிக்கூட பாமரன்-தான்..துணி விற்பவன் கூட பாமரன்-தான். அவனுக்கு ஒரு கலர் ஒஃப் பேரடைஸ், சில்ரன் ஒஃப் ஹெவென்...போன்ற அனுபவங்கள் கிடைக்கும் போது என்னை போன்ற இந்திய பாமரனின் நிலை ஏன் இப்படி..?

அதுக்காக நல்ல படங்களே இல்லையா...இருக்கிறது.சத்யஜித் ரே போன்ற மேதைகள் தந்த இந்திய சினிமாவை பார்த்து இப்படி சொன்னால்.. மிக பெரிய பாவம்.ஆனால் ஒரு சத்யஜித் ரே போதுமா..
ஜப்பான், அகிரா குரோசாவை மட்டுமே காட்டி காலம் தள்ளிக்கொண்டிருக்கவில்லை... Nagisa Ôshima, Yasujirô Ozu தொடங்கி Takeshi Kitano வரை உலக புகழோடு தனக்குள் வைத்திருக்கும் சினிமாதான் ஜப்பான்..இன்னும் பலரை உதாரணம் காட்டலாம்..

கடந்த பத்தாண்டுகளில் சில உயர்த்தர தமிழ் படங்கள் ஒரு படி முன்னுக்கு சென்றால்..கமர்ஷியல் போர்வையில் வெளிவரும் பல "மொக்கை" படங்கள் அதன் அங்கீகாரத்தை தடுக்கின்றன..ஒரு நல்ல படம் அடையும் வெற்றியை தொடர்ந்து மேற்கொண்டு முயற்சித்து அதன் வழியில் பல படங்கள் எடுக்க வேண்டாமா??அதனை வெற்றிப்பெற செய்யும் ரசிகர்களின் ரசனையை வரவேற்காமல், "பழைய சோறையே" புதுத் தட்டில் போட்டுத்தர துடிக்கும் நபர்களை என்னவென்று சொல்வது..காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படமெடுக்கலாம் என்ற சூழ்நிலையில் இது போன்றவர்களின் சில தவறுகள்..நம்மை உலக அரங்கில தலை நிமிர செய்ய முடியாமல் இருக்கிறது..
   
உலக சினிமா அறிமுகமான நேரத்தில் கேன்ஸ் வரை சென்ற மை மேஜிக் (2008) என்ற சிங்கப்பூர் படத்தின் அறிமுகம் கிடைத்தது..சீன இயக்குனர் எரிக் கூ எடுத்த தமிழ் படம்..கேட்பதற்கே ஆச்சரியமாக இருந்தது..ஒரு சீனர் எடுத்த தமிழ் படமா..தமிழன பத்தி தமிழன் எடுத்தாலே நல்லாருக்க மாட்டேங்குது..இதுல இது வேறயா என்ற அலட்சியத்தில் தான் படம் பார்த்தேன்..அநேகமாக கேன்ஸ் விழாவில் (பால்மர் டி ஓர்) விருதுக்கு போட்டியிட்ட முதல் தமிழ் படமது.வெற்றி பெறவில்லை-தான்.இருந்துவிட்டு போகட்டும்.என்றாலும் அந்த ஆண்டின் சிறந்த படமாக ப்ரான்ஸ் நாட்டு சஞ்சிகையே வெளியிட்டது..அதுவும் சீனர் எடுத்த சிங்கப்பூர் தயாரிப்பு..எத்தனை பேருக்கு இந்த படம் தெரியும் என்று தெரியவில்லை..கிடைத்தால் பாருங்கள்..தமிழில் சமீபத்தில் நீங்கள் வியந்து பார்த்த, சிறந்ததாக கருதிய சில தமிழ் நாட்டு படங்களுக்கு கொஞ்சமும் சலைத்ததில்லை..ஆக சிறந்த எதார்த்தமான தமிழ் மொழி படங்களில் டாப்-லிஸ்ட்டில் வைப்பீர்கள்..

ஒரு சீனரால் சாத்தியமானது ஏன் தமிழரால் முடியவில்லை..என்ற சிந்தனைக்கு வருவீர்கள்..சினிமா, மொழி-இனம்-மதம் போன்ற விஷயங்களை தாண்டியது என்ற முடிவுக்கு வந்தாலும் வரலாம்..அதே கேன்ஸில் சென்ற ஆண்டு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு-தமிழ் படமான தீபன் சமீபத்தில் பார்க்க கிடைத்தது..தமிழர்களை பற்றிய படத்தை, தமிழ் மொழி சினிமாவை வேற்று மொழிக்காரர்கள்-தான் வாழ வைக்க வேண்டிய சூழ்நிலை..ஆஸ்கரை குறை சொல்பவர்கள் சொல்லட்டும்..அவர்கள் அரசியல் செய்கிறார்கள் என்றே நம்புவோம்...சினிமாவின் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை கேன்ஸ் பட விழாவுக்கு உண்டு..என்ன மொழி பேசுகிறார்கள் கூட சொல்லும் அளவுக்கு பலத்தர "சினிமா"வை உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்கிறது..அங்கு பேசப்படும் தமிழ் மொழியை உலகின் மிக சிறந்த சினிமா கலைஞர்கள் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் போதே உச்சிக்குளிர்கிறது..வேற்று இனத்தவருடன் சினிமா பற்றி பேசும் போது "அது என் மொழிடா" என பெருமைக்கொள்ள முடிகிறது..அந்த பெருமை இன்னும் தொடர வேண்டாமா...??    
 கமர்ஷியல் படங்களை தொடக்கி வைத்த ஹாலிவுட் சினிமாவில் கூட எத்தனையோ நல்ல தரமான படங்கள் வருகின்றன..ஆனால் டப் செய்யும் போது கூட ஹாலிவுட் மசாலா-வையே பார்த்து பார்த்து மொழிமாற்றம் செய்பவர்களை நினைக்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை..

நான் பார்த்த வரையில் கடந்த சில வருடங்களில் என்னை வெகுவாக கவர்ந்த சில தமிழ் படங்கள் இவை:
Irudhi Suttru, Visaranai, Zero, Joker, Kuttrame Thandanai,36 Vayadhinile, Demonte Colony, Kaaka Muttai, Kuttram Kadithal, Thegidi, Vaayai Moodi Pesavum, Kathai Thiraikathai Vasanam Iyakkam, Pisasu, Kadhalum Kadanthu Pogum, Azhagu Kutti Chellam, Vennira Iravuggal (மலேசியா)


சில நாட்களுக்கு முன்பு குற்றமே தண்டனை படம் பார்த்து முடித்த போது தோன்றிய சில எண்ணங்களை இங்கு பதிவு செய்திருக்கிறேன். 2016 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் படமாக நினைக்கிறேன்..இது போன்ற படங்களை ரசிக்கும் ஒரு சிறிய பார்வையாளனாக எழுதிய கருத்துக்கள் இவை..யாரையும் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் காயப்படுத்துவதற்காக எழுதியவை அல்ல..இதில் சில குறைகளும் இருக்கலாம்.ஏதாவது தவறு இருப்பின் மன்னிப்பு கேட்டு விடைப்பெறுகிறேன்..அடுத்த பார்வையில் சந்திக்கும் வரை நான்.
Related Posts Plugin for WordPress, Blogger...